Tuesday, March 17, 2009

33-34. ஹீப்ருவுக்கு உயிர் அளித்த யூதர்கள். இஜ்வீ.-பகுதி.33-34

33] ஹீப்ருவுக்கு உயிர் அளித்த யூதர்கள்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 33

புராதன ஹீப்ருவுக்குப் புத்துயிர் அளிக்க பாலஸ்தீன் யூதர்கள் முயற்சி மேற்கொண்டிருந்த பதினாறாம் நூற்றாண்டின் முற்பகுதியில், ஐரோப்பாவில் மிக முக்கியமானதொரு சம்பவம் ஆரம்பமானது. மிக முக்கியமானதென்றால், மிக, மிக முக்கியமானது.

கிறிஸ்துவ மதத்துக்குள் நடந்த ஒரு புரட்சி என்று அதனைச் சொல்லலாம். புராதன கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களிலிருந்து கருத்தளவிலும் தத்துவ ரீதியிலும் பெரிதும் வேறுபட்ட ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்துவர்களின் எழுச்சியே அது.

ஒட்டுமொத்த கிறிஸ்துவ ஐரோப்பாவிலும் அன்றைக்கு இதுதான் பேச்சு. ப்ராட்டஸ்டண்ட்டுகளின் எழுச்சி. கிறிஸ்துவ மதத்துக்குள் அத்தனை ஆழமான விரிசல் உருவாகும் என்று பலர் எதிர்பார்த்திராத சமயம் அது.

அரசல்புரசலாக விரிசல்கள் இருந்தன என்றாலும், எதிர்ப்பாளர்கள் என்று வருணிக்கப்பட்ட ப்ராட்டஸ்டண்ட்டுகள் (Protest செய்ததால் அவர்கள் Protestants! அவ்வளவுதான்.

கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களுக்கும் இந்த எதிர்த்தரப்புக் கிறிஸ்துவர்களுக்கும் இடையில் என்ன பிரச்னை, எதனால் பிரிந்தார்கள் என்பதெல்லாம் மிக விரிவாகப் பேசப்படவேண்டிய விஷயங்கள்.

நூற்றுக்கணக்கான நுணுக்கமான காரணங்கள் இதற்கு உண்டு. ஆனால், இந்தத் தொடரில் அதற்கெல்லாம் இடமில்லை.) இத்தனை தீவிரமாகப் புறப்படுவார்கள் என்றோ, இத்தனை எதிர்ப்பாளர்கள் இருப்பார்கள் என்றோகூட சநாதன கிறிஸ்துவர்கள் எதிர்பார்க்கவில்லை. யூதர்களை விரட்டியடிப்பது என்கிற கிறிஸ்துவர்களின் தலையாய நோக்கத்தையே திசை திருப்பும் அளவுக்கு ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்துவர்களின் எழுச்சி ஐரோப்பாவை ஒரு ஆட்டு ஆட்டுவித்துக்கொண்டிருந்தது.

இதன் காரணகர்த்தா, மார்ட்டின் லூதர். ப்ராட்டஸ்டண்ட்டுகளின் பெருந்தலைவராக அடையாளம் காணப்பட்டவர். (இவர் ஜெர்மன் பாதிரியார். மார்ட்டின் லூதர் கிங் அல்ல.)

ஆனால், கத்தோலிக்கக் கிறிஸ்துவர்கள்தான், யூதர் விரோத நடவடிக்கைகளை அப்போது தாற்காலிகமாக ஒத்திவைத்துவிட்டு, ப்ராட்டஸ்டண்டுகளை கவனித்துக்கொண்டிருந்தார்களே தவிர, ப்ராட்டஸ்டண்டுகள் யூதர்களை விடுவதாக இல்லை. முக்கியமாக, மார்ட்டின் லூதர்.

கி.பி. பதினாறாம் நூற்றாண்டு தொடங்கி, ஹிட்லரின் காலம் வரை ஐரோப்பிய தேசங்களிலிருந்து யூதர்கள் மிகக் கொடூரமாகத் துரத்தப்பட்டதற்கும் நிகழ்ந்த படுகொலைகளுக்கும் ஆதிமூலக் காரணமாக யூத சரித்திர ஆசிரியர்கள் சுட்டிக்காட்டுவது மார்ட்டின் லூதரின் யூத விரோதப் பிரசாரங்களைத் தான்.

இதில் உள்ள உணர்ச்சிவசப்பட்ட வரிகளையும், மிகையான தகவல்களையும் விலக்கிவிட்டுப் பார்த்தால் கூட, ஒருவர், இருவர் என்றில்லாமல் அத்தனை பேருமே இந்த விஷயத்தில் அவர் மீது கடும் கோபம் கொண்டு தாக்கியிருப்பதைப் புரிந்துகொள்ள முடியும்!

ப்ராட்டஸ்டண்டுகளுக்கு யூதர்கள் மீது அப்படியென்ன வெறுப்பு?

இதற்குப் பிரத்தியேகக் காரணங்கள் என்று எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை. ப்ராட்டஸ்டண்டுகள் என்றாலும் அவர்களும் கிறிஸ்துவர்கள். அவர்களும் ஐரோப்பியர்கள். இதுதான் ஒரே காரணம். மற்றவர்களுக்கும் இது மட்டும்தான் காரணம். யூதர்களா, துரத்தியடி. இதற்கெல்லாம் ஒரு காரணம் வேறு வேண்டுமா என்ன? அன்றைய ஐரோப்பா மொத்தமே அப்படித்தான் இருந்தது.

ஆனால் கிறிஸ்துவர்களிடையே புதிதாகப் பிரிந்து, தனியடையாளம் கண்ட ப்ராட்டஸ்டண்டுகள், இந்த அதிதீவிர யூத எதிர்ப்பின் மூலம் இன்னும் சீக்கிரமாகப் பிரபலமடைந்தார்கள் என்பதை மறுக்கமுடியாது!

பின்னாளில் கத்தோலிக்கக் கிறிஸ்துவர்களைக் காட்டிலும் ப்ராட்டஸ்டண்டுகள் என்றால் யூதர்களுக்குக் கூடுதலாகப் பற்றிக்கொண்டு வந்ததன் காரணமும் இதுதான்.

பிரச்னையின் ஆரம்பம், மார்ட்டின் லூதரின் ஒரு கடிதம்தான் என்று அடித்துச்சொல்கிறார்கள், யூத வரலாற்று ஆசிரியர்கள். (மார்ட்டின் கில்பர்ட் போன்ற சமீபகால ஆராய்ச்சியாளர்கள் கூட இக்கடிதத்தைக் குறிப்பிடத் தவறுவதில்லை!) சற்று விவகாரமான அந்த விஷயத்தைக் கொஞ்சம் அலசவேண்டியது கட்டாயம்.

1543-ம் ஆண்டு லூதர், தம்மைப் பின்பற்றும் கிறிஸ்துவர்களுக்கு ஒரு பகிரங்கக் கடிதம் எழுதினார். அந்தக் கடிதக் கட்டுரைக்கு ளியீ tலீமீ யிமீஷ்s ணீஸீபீ ஜிலீமீவீக்ஷீ லிவீமீs என்று தலைப்பு வைத்தார். மிக விரிவாக, ஏழு பகுதிகளாக எழுதப்பட்டிருந்த அந்தக் கடிதத்தின் சாரத்தைப் பின்வருமாறு வரிசைப்படுத்தலாம்:

1. யூதர்களின் தேவாலயங்கள் எதுவும் செயல்படக்கூடாது. ஒன்று, எரித்துவிட வேண்டும். அல்லது, யாரும் உள்ளே போக முடியாதபடி பாழ்படுத்தி, குப்பைகளால் நிரப்பிவிட வேண்டும்.

2. இதனை வன்முறையாகக் கருதாமல், கடவுளுக்காக மேற்கொள்ளப்படும் ஒரு நடவடிக்கையாக நினைக்கவேண்டும். தொடர்ந்து யூதர்கள் தம்மைக் குறித்தும் தமது சமூகம் குறித்தும் உயர்த்தியும் பெருமை பேசியும் செய்துவரும் பொய்ப்பிரசாரங்களை முறியடிக்க இதுவே ஆரம்பமாகும்.

3. தேவாலயங்கள் செயல்படுவதைத் தடை செய்யும்போது அவர்கள் தம் நடவடிக்கைகளை வீட்டிலிருந்தும் தொடரக் கூடும். அதனால் யூதர்களின் வீடுகளையும் இடித்துவிடுங்கள். தம்மைப் பற்றிய மிகையான மதிப்பீடுகள் கொண்ட யூதர்கள், ஜிப்ஸிகள் போல் திரியத்தொடங்கியபிறகாவது யோசிக்க ஆரம்பிக்கலாம்.

4. யூதர்களின் பொய்கள் அனைத்தும் அவர்களது மத நூல்களான தோரா, தால்மூத் ஆகியவற்றிலிருந்துதான் உற்பத்தியாகின்றன. அந்த நூல் பிரதி ஒன்று கூட அவர்கள் கையில் இருக்கக் கூடாது; கிடைக்கவும் கூடாது. அதற்காவன செய்யவேண்டும்.

5. யூத மதபோதகர்களை, குருமார்களை (Rabbi) அச்சுறுத்தி வைக்கவும். தொடர்ந்து அவர்கள் போதனைகளைத் தொடருவார்களேயானால் உயிருக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என்பதை அவர்கள் உணரவேண்டும்.

6. யூதர்களின் பாஸ்போர்ட்களைப் பறிமுதல் செய்யவேண்டும். வியாபாரம் உள்ளிட்ட எந்தக் காரணத்துக்காகவும் அவர்கள் எங்கேயும் நகர முடியாதபடி செய்துவிடுவது அவசியம்.

7. யூதர்கள் நிறைய சொத்து சேர்த்திருக்கிறார்கள். அவர்களது பணம், நகைகளைப் பறிமுதல் செய்யவேண்டும். அவை அனைத்தும் நம்மிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டவை; வழிப்பறி செய்யப்பட்டவை என்பதை முதலில் உணரவேண்டும்.

8. இத்தனைக்குப் பிறகும் அவர்களால் நமக்கோ, நமது மனைவி மக்களுக்கோ, நமது ஊழியர்களுக்கோ, சகாக்களுக்கோ ஏதேனும் ஆபத்து வரும் என்று நினைப்பீர்களானால் அவர்களை வெளியேற்றத் தயங்கவேண்டாம். பெரும்பாலான ஐரோப்பிய தேசங்கள் அதைத்தான் இப்போது செய்துகொண்டிருக்கின்றன. நீங்களும் செய்யலாம்; தவறில்லை.

ப்ராட்டஸ்டண்ட் கிறிஸ்துவர்களுக்கு மார்ட்டின் லூதர் எழுதியதாக யூத வரலாற்று ஆசிரியர்கள் எடுத்துக்காட்டும் இக்கடிதத்தில் இன்னும் கூடப் பல திடுக்கிடும் உத்தரவுகள், யோசனைகள் இருக்கின்றன.

ஐரோப்பாவில் அன்றைக்கு யூதர்கள் எத்தகைய அச்சுறுத்தல்களுக்கு இடையே வாழ நேர்ந்திருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டுவதற்காக மட்டுமே மேற்கண்ட சில உத்தரவுக் குறிப்புகள்.

உண்மையில், எந்த ஒரு ஐரோப்பிய தேசத்திலும் யூதர்கள் பாதுகாப்பாக வாழமுடியாது என்று மிகத்தெளிவாகத் தெரிந்த காலகட்டம் அது.

அச்சுறுத்தல்கள் பல்வேறு இடங்களிலிருந்து மிகக் கடுமையாக வரத் தொடங்கியிருந்தன. பிரான்ஸ், இத்தாலி, போலந்து, இங்கிலாந்து போன்ற தேசங்களில் யூதர்கள் தனியாகச் சாலையில் நடந்து செல்லவே பயந்தார்கள்.

எப்போதும் ஏதாவது ஓர் ஆயுதத்தை ரகசியமாகத் தங்கள் ஆடைகளுக்குள் ஒளித்து வைத்திருந்தார்கள்.

கிறிஸ்துவர்களின் திருவிழாக் காலங்கள், கிறிஸ்துவ தேவாலய விழாக்கள் நடைபெறும் மாதங்களில் எல்லாம் கூடுமானவரை ஊரைவிட்டு வெளியே போய்விடப் பார்ப்பார்கள். எத்தனை சீக்கிரம் முடியுமோ, அத்தனை சீக்கிரம் தேச எல்லையைக் கடந்து போய்விட மிகவும் விரும்பினார்கள்.

இந்தமாதிரியான காலகட்டத்தில் பாலஸ்தீனில் மீண்டும் யூதர்கள் இளைப்பாற ஒரு சந்தர்ப்பம் ஏற்பட்டிருக்கிறது என்னும்போது வேறென்ன செய்வார்கள்?

அணி அணியாகப் பாலஸ்தீனை நோக்கி வரத் தொடங்கினார்கள்.

துருக்கியப் பேரரசின் அங்கமாக இருந்த பாலஸ்தீனில் இம்மாதிரியான எந்தப் பிரச்னையும் இல்லை என்பது உடனடிக் காரணம். சொந்த ஊருக்கு இந்த சாக்கிலாவது போய்ச் சேர்ந்துவிட முடிகிறதே என்பது இன்னொரு காரணம். இப்படித்தான் பதினாறு, பதினேழாம் நூற்றாண்டுகளில் ஏராளமான யூதர்கள் பாலஸ்தீனுக்கு வந்து சேர்ந்தார்கள்.

இந்த வகையில் பதினாறாம் நூற்றாண்டைக் காட்டிலும், பதினேழாம் நூற்றாண்டில் வந்தவர்கள் மிகவும் அதிகம்.

குறிப்பாக, கி.பி. 1648-ம் ஆண்டு யூதகுலம் ஹிட்லரின் தாத்தா ஒருவரை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர் பெயர் பொக்டான் ஷெமீயில்நிகி. (Bogdan Chmielnicki). கொசாக்குகள் (Cossack) என்று அழைக்கப்பட்ட அன்றைய கிழக்கு ஐரோப்பிய புரட்சியாளர்களின் தலைவர் இவர்.

லித்துவேனியா, போலந்து, உக்ரைன் போன்ற நாடுகளில் இவரது ஒரு சொல்லால் உந்தப்பட்ட கிறிஸ்துவர்கள், கூட்டம் கூட்டமாக, கொத்துக் கொத்தாக யூதர்களைக் கொன்று தள்ள ஆரம்பித்தார்கள். பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என்றெல்லாம் அவர்கள் சற்றும் பார்க்கவில்லை.

ஒரு யூதரைக் கொன்றுவிட முடியுமானால் ஒரு கிறிஸ்துவருக்கு சொர்க்கம் நிச்சயம் என்று அப்போது சொல்லப்பட்டது.

முதலில் கண்ட இடத்தில் வெட்டித்தள்ளிக்கொண்டிருந்தவர்கள், கொலை பழகிவிட்டதும் சித்திரவதை செய்து கொல்லலாம் என்று முடிவு செய்து விதவிதமான சித்திரவதை உத்திகளை யோசிக்கத் தொடங்கினார்கள். (பின்னாளில் இந்தக் கொசாக்குகளின் பரிமாண வளர்ச்சியாகத்தான் ஜெர்மனியில் ஹிட்லர் கால ஆட்சி இருந்தது.)

கழுத்தில் கத்தியை வைத்து அறுத்து, அப்படியே சதையை இடுப்பு வரை உரித்தெடுப்பது, விரல்களைத் தனித்தனியே வெட்டி எடுத்து ஒரு மாலையாகக் கோத்து, வெட்டுப்பட்டவரின் கழுத்தில் அணிவித்து, கழுத்தை ரம்பத்தால் அறுப்பது, ஒவ்வொரு முடியாகப் பிடுங்கி முழுத்தலையையும் ரத்தக்காயமாக்கிவிட்டு அதன் மேல் கொதிக்கக் கொதிக்க வெந்நீரை ஊற்றுவது என்று குரூரத்தின் பல்வேறு எல்லைகளை அவர்கள் திறந்து காட்டினார்கள்.

இந்தக் கொடுங்கோன்மையிலிருந்து தப்பித்த சில யூதர்கள், நீண்டதூரப் பிரயாணம் மேற்கொள்ள அவகாசம் இல்லாமல் உடனடி சாத்தியங்கள் தெரிந்த பால்கன் தீபகற்பத்துக்கும் ஜெர்மனிக்கும் ஹாலந்துக்கும் அகதிகளாகத் தப்பிப்போய்ப் பிழைத்தார்கள்.

இவர்கள் அல்லாமல் இன்னும் சில யூதர்கள் எங்குமே போக வழியின்றி வலுக்கட்டாயமாக கிறிஸ்துவத்துக்கு மதம் மாறி, அந்தந்த நாடுகளிலேயே தங்கிவிட்டதும் நடந்திருக்கிறது.

(போலந்தில் மட்டும் பொக்டான் ஷெமீயில்நிகியின் காலத்துக்குப் பிறகு பதவிக்கு வந்த மன்னர், நிர்ப்பந்தத்தின்பேரில் கிறிஸ்துவத்துக்கு மாறிய யூதர்கள் மீண்டும் யூதர்களாகி, தம் மத வழக்கங்களைக் கடைப்பிடிக்கலாம் என்று அனுமதியளித்ததாகவும், அதன்படி சில ஆயிரம் பேர் தாங்கள் யூத மதத்தையே மீண்டும் கடைப்பிடிக்கிறோம் என்று அறிவித்ததாகவும் சில நூல்கள் தெரிவிக்கின்றன. இ

து பற்றிய விரிவான தகவல்கள் ஏதும் கிடைக்கவில்லை. ஆனால் ஒரு விஷயம். யூத மதத்திலிருந்து கிறிஸ்துவத்துக்குப் போனவர்கள் உண்டே தவிர, வேறெந்த மதத்திலிருந்தும் யூத மதத்துக்கு ‘மாற’ முடியாது. அதற்கு அனுமதி இல்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.)

இத்தனை களேபரங்களுக்கு இடையில் உயிர்பிழைத்து, பாலஸ்தீன் வரையிலுமேகூட வர முடிந்த யூதர்கள், நடந்த கதைகளை விலாவாரியாக எடுத்துச் சொன்ன கையோடு, அப்போது அங்கே பரவலாகிக்கொண்டிருந்த ஹீப்ரு மொழி மறுமலர்ச்சிப் பணிகளில் உடனடியாக ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள்!

போலந்திலிருந்து அப்படித் தப்பிவந்த ஒரு யூதர், தமது முன்னோர்களின் மொழியான ஹீப்ருவை முதல் முதலாகத் தமது நாற்பது வயதுக்கு மேல் கற்றுக்கொண்டு, தமது தேசத்தில் நடந்த யூத இனப் படுகொலைகளை விவரித்து அந்த மொழியில் ஒரு நூலே எழுதியிருக்கிறாராம்.

துரதிருஷ்டவசமாக இன்று அந்தப் புத்தகம் இஸ்ரேலில் கூடக் கிடைப்பதில்லை. கிடைத்திருக்குமானால், எத்தனை நெருக்கடி காலம் வந்தாலும் யூதர்கள் தமது இனத்தையும் மொழியையும் காப்பதற்கான பணி என்று எது ஒன்று சுட்டிக்காட்டப்பட்டாலும் எப்படி உடனே அதில் மூழ்கிவிடுவார்கள் என்பதை மிகத்துல்லியமாக வெளிப்படுத்தக்கூடிய ஓர் ஆவணமாகத் திகழ்ந்திருக்கும்!

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 17 மார்ச், 2005

34] இஜ்வீ .
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 34

எத்தனையோ தமிழ் சினிமாக்களில் பார்த்திருக்கலாம். மிக உக்கிரமான, தீவிரமான சம்பவங்கள் நடப்பதற்கு முன்னதாகவோ அல்லது நடந்து முடிந்தவுடனேயோ சம்பந்தமில்லாமல் ஒரு நகைச்சுவைக் காட்சி அவசியம் செருகப்பட்டிருக்கும்.

ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்கு ஒருவேளை அந்த நகைச்சுவைக் காட்சி உதவக்கூடியதாக இருக்கும். துக்கத்தையோ, கோபத்தையோ அதிகப்படுத்துவதாகவும் சமயத்தில் அமைந்துவிடும். எப்படியானாலும் நெருக்கடிக்குச் சற்று முன்னதாகவோ பின்பாகவோ ஒரு நகைச்சுவைக்காட்சி அமைவதென்பது இயற்கையின் நியதி போலிருக்கிறது.

பாலஸ்தீன யூதர்களின் வாழ்விலும் அப்படியரு நகைச்சுவைக்காட்சி கி.பி. பதினேழாம் நூற்றாண்டில் அரங்கேறியது.

ஒரு பக்கம் போலந்திலிருந்தும் லித்துவேனியாவிலிருந்தும் உக்ரைனிலிருந்தும் லட்சலட்சமாக யூதர்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து வந்துகொண்டிருந்தார்கள். மறுநாள் பொழுது விடிவதைப் பார்ப்போமா என்பதே அப்போது அவர்களின் தலையாய கவலையாக இருந்தது.

கொசாக்குகளின் கோரதாண்டவத்தில் தினம் சில ஆயிரம் யூதர்களாவது கொல்லப்பட்டுக்கொண்டிருந்த சமயம்.

ஒட்டுமொத்த யூதகுலமே நடுநடுங்கிக்கொண்டிருந்த நேரம். ஒட்டாமான் துருக்கியப் பேரரசின் எல்லைக்குள் நுழைந்துவிட்டால் உடனடி உயிர்ப்பயம் இல்லை என்கிற ஒரே ஒரு நம்பிக்கைதான் அவர்களிடம் இருந்தது.

பிழைத்துக்கிடந்தால் பாலஸ்தீன் வரை போகலாம். மூதாதையர்களின் பூமியான ஜெருசலேத்தில் வாழமுடிந்தால் விசேஷம். ஜெருசலேத்தைக் கைப்பற்றுவதையெல்லாம்கூட அப்புறம் பார்த்துக்கொள்ளலாம்.

இப்படி வாழ்க்கைப் போராட்டத்தில் அவர்கள் சிக்கிக்கொண்டிருந்த தருணத்தில்தான் ஷபாத்தி இஜ்வி என்ற ஒரு யூதரைப் பற்றி துருக்கியப் பேரரசு முழுவதிலும் இருந்த மக்கள் பேச ஆரம்பித்தார்கள்.

போலந்தில் பொக்டான் ஷெமீயில்நிகியின் வெறிபிடித்த ராணுவம் யூதர்களைக் கொல்லத்தொடங்கிய காலகட்டத்தில், இஜ்விக்கு வயது இருபத்திரண்டு. மிகவும் இளைஞர். ஆனால், அந்த வயதிலேயே அவருக்கு குரு ஸ்தானம் கிடைத்திருந்தது. ஒரு ‘ரபி’யாக அறியப்பட்டிருந்தார்.

ஆனால் இஜ்விக்கு வெறும் ரபியாக இருப்பதில் விருப்பமில்லை. அதற்கு மேலே ஒரு கிரீடம் சூடிக்கொள்ள ஆசைப்பட்டார். என்ன செய்யலாம்? குருமார்களின் குருவாகலாம். அதற்கு ஏதாவது அரசியல் செய்ய வேண்டியிருக்கும். அல்லது மக்கள் தலைவராகலாம். களத்தில் இறங்கிப் போராடவெல்லாம் அவருக்கு விருப்பமில்லை.

கட்டளையிட மட்டுமே ஆர்வம் இருந்தது. தீவிரமாக யோசித்து அவர் ஒரு முடிவுக்கு வந்தார்.

“ஓ, யூதர்களே! என்னிடம் வாருங்கள். நான் சொல்வதைக் கேளுங்கள். ஒரு தேவதூதரின் குரலை நான் கேட்டேன். யூத இனத்தைப் பாதுகாக்க, கடவுள் என்னைத் தூதுவராகத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருக்கிறார்’’ என்று ஓர் அறைகூவல் விடுத்தார்.

கொஞ்சம் தடுமாறிப்போனார்கள் யூதர்கள். எப்படி அரேபியர்களிடையே போய் ஒரு தேவதூதர் பிறக்கமுடியும்? என்று முகம்மது நபியை அங்கீகரிக்க மறுத்த யூதர்கள்; இறைத்தூதர் என்று ஒருவர் தோன்ற முடியுமானால் அது யூத குலத்தில் மட்டுமே நிகழமுடியும் என்று உளமார நம்பிய யூதர்கள்; யாராவது வந்து தங்களைக் காப்பாற்ற மாட்டார்களா, உயிர்பிழைத்துத் தங்கள் புனித மண்ணான ஜெருசலேத்தை மீண்டும் அடையமாட்டோமா என்று தவியாய்த்தவித்துக்கொண்டிருந்த யூதர்கள்...

அவர்களுக்கு இஜ்வியின் இந்த அறிவிப்பு பரவசத்தையும் உத்வேகத்தையும் தரத்தொடங்கியது. மிகவும் ஊன்றிக் கவனிக்க வேண்டிய விஷயம் இது.

ஒருவர் தம்மை இறைத்தூதராக அறிவித்துக்கொள்வதற்கு எத்தனை நெஞ்சுரமும் துணிச்சலும் இருந்திருக்க வேண்டும்!

மோசஸ் என்கிற மூசா இறைத்தூதராக அறிவிக்கப்பட்டபோதும் இயேசுவின் இறைத்தன்மை தெரியவந்தபோதும் முகம்மது நபி இறைவனின் தூதுவராகச் செயல்படத் தொடங்கியபோதும் பட்ட பாடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. தாம் புழங்கிய சமூகத்தினராலேயே அவர்கள் அவமானப்படுத்தப்பட்டார்கள். தாக்குதலுக்கு உள்ளானார்கள்.

இயேசுவுக்கும் முகம்மது நபிக்கும் எண்ணற்ற எதிரிக்குழுக்கள் இருந்தன. அவர்களைக் கொல்வதற்கு எத்தனையோ உபாயங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. அத்தனையையும் மீறி அவர்கள் வெற்றி கண்டதற்கு ஒரே ஒரு காரணம்தான் இருக்க முடியும்.
அவர்களது நோக்கத்தில் பொதுநலமும் பேச்சில் உண்மையும் மட்டுமே இருந்ததுதான் அது.


ஆனால். கடைசி நபியான முகம்மதுவின் காலத்துக்குச் சுமார் தொள்ளாயிரம் ஆண்டுகள் கழித்து இஜ்வி தன்னை ஓர் இறைத்தூதராக அறிவித்துக் கொள்கிறார்.

உலகம் எத்தனையோ முன்னேறிவிட்டிருந்த காலம். மக்களின் கல்வி வளர்ச்சி, சிந்தனை வளர்ச்சி மேம்பட்டிருந்த காலம். யாரும் அப்போது ஆதிவாசிகளாக இல்லை. நாகரிகமடைந்துவிட்டிருந்த சமூகம்தான். அதுவும் கல்வியிலும் கலைகளிலும் சிறப்பிடம் பெற்றிருந்த துருக்கியப் பேரரசிலிருந்து அப்படியரு குரல் கேட்கிறது.

நியாயமாக யூதர்கள் அப்போது சிந்தித்திருக்க வேண்டும். இஜ்வியை அறிவுத்தளத்தில் பரீட்சை செய்தும் பார்த்திருக்கலாம். ஆனால் உணர்ச்சியின் வசப்பட்டிருந்த யூதர்களுக்கு அதெல்லாம் ஏனோ தோன்றாமல் போய்விட்டது.

ஸ்மிர்னா நகரில் (இன்றைக்கு இது இஜ்மிர்) இருந்த யூத தேவாலயத்தில் இருந்தபடி இஜ்வி, நான்கு எழுத்துக்களால் ஆன இறைவனின் பெயரை உச்சரித்தார். (ஆங்கிலத்தில் உச்சரிப்பதானால் YHWH என்று வரும். உச்சரித்துப் பார்ப்பது சிரமம். ஆனால் இது ஹீப்ரு மொழி உச்சரிப்பு. தோராயமாகத் தமிழில் ‘யெவ்’ எனலாம். ) இந்தச் சொல் ஹீப்ரு பைபிளில் (தோரா) சுமார் ஏழாயிரம் முறை உச்சரிக்கப்படுகிறது.

ஆனால் நவீன ஹீப்ருவில் இச்சொல் கிடையாது. இப்பெயரை உச்சரிக்கவே மிகப்பெரிய தகுதி வேண்டுமென்று சொல்லப்படும். மூத்த மத குருக்கள், துறவிகள் மட்டுமே இறைவனை இந்தச் சொல்லால் கையாளமுடியுமே தவிர, சாதாரண மக்கள் இதனைப் பயன்படுத்தமாட்டார்கள், பயன்படுத்தவும் கூடாது.

அப்படிப்பட்ட சொல்லை, திடீர் இறைத்தூதர் இஜ்வி உச்சரித்தார். அதைப்பார்த்த மக்கள் வியப்பிலும் அதிர்ச்சியிலும் வீழ்ந்து, அவரை அடிபணிந்துவிட்டார்கள்.

இஜ்வி, அத்துடன் நிறுத்தவில்லை. யூதர்களின் சமய நம்பிக்கைகள் சார்ந்த சில மாற்றங்களையும் அறிமுகப்படுத்தத் தொடங்கினார்.

உதாரணமாக, ஜெருசலேமில் மன்னர் சாலமனின் தேவாலயம் இடிக்கப்பட்ட தினத்தை யூதர்கள் நினைவுகூர்ந்து வருஷத்தில் ஒருநாள் அதை அனுஷ்டிப்பார்கள். அதை மாற்றி, ‘நீங்கள் இனி உங்கள் தேவதூதரின் பிறந்தநாளைக் கொண்டாடுங்கள். அதுவும் இதுவும் ஒரே தேதிதான்’ என்று அறிவித்தார். அதாவது தன்னுடைய பிறந்தநாள்!

கிட்டத்தட்ட அத்தனை யூதர்களுமே அன்றைக்கு இஜ்வி ஜுரம் பிடித்து அலைந்துகொண்டிருந்தார்கள். ஏதோ நடக்கவிருக்கிறது, யூதர்களின் விடுதலை நாள் நெருங்கிவிட்டது என்று உளமார நம்பத்தொடங்கிவிட்டார்கள். தங்கள் இனத்தில் இன்னொரு தேவதூதர் உதித்துவிட்டார் என்று ஊரெல்லாம், உலகெல்லாம் பேசத்தொடங்கினார்கள்.

தோதாக இஜ்வி ஒரு காரியம் செய்தார். ஸலோனிகா என்கிற இடத்துக்குப் போய், ‘தோரா’வை மணந்துகொண்டார்!

தோராவை மணப்பதென்பது, துறவு வாழ்வை மேற்கொள்வதைக் குறிப்பால் உணர்த்தும் ஒரு யூத மதச் சடங்கு. யூதர்களின் மத நூலான தோராவைத் திருமணம் செய்து கொள்வது போல ஒரு சடங்கு நடத்தி, அதன்மூலம், சம்பந்தப்பட்ட ரபி, லௌகீக வாழ்க்கையிலிருந்து விலகிவிட்டதாக அறிவிக்கப்படுவார்.

இஜ்வி, தயங்காமல் இந்தச் சடங்கையும் மேற்கொண்டார்.
இதற்குப் பின் அதிகாரபூர்வமாகவே தன்னையரு தேவதூதராகச் சொல்லிக்கொண்டு க்ரீஸ், இத்தாலி, துருக்கி என்று பயணங்கள் மேற்கொள்ள ஆரம்பித்தார். போகிற இடங்களிலெல்லாம் யூதர்கள் அவரது தாள் பணிந்தார்கள். கண்ணீர் மல்க கைகூப்பித் தொழுதார்கள்.


தனது பயணத்திட்டத்தின் இறுதியில் இஜ்வி பாலஸ்தீனுக்கு வந்தார். அங்கே, ஜெருசலேமில் இருந்த ஒரு யூத தேவாலயத்தில் அவருக்கு ‘தூதர்களின் அரசர்’ என்கிற பட்டத்தை உள்ளூர் ரபிகள் சூட்டினார்கள். (காஸா பகுதியில் அப்போது வசித்துக்கொண்டிருந்த நதன் என்கிற ஒரு மூத்த குரு இப்பட்டத்தைச் சூட்டியதாகச் சில வரலாற்று நூல்கள் தெரிவிக்கின்றன.)

உடனே, இயேசுவுக்கு ஒரு யோவான் போல இஜ்விக்கு நதன் என்று அவரையும் கொண்டாடச் சொல்லிவிட்டார் இஜ்வி!

இதில் மனம் குளிர்ந்துவிட்ட நதன், ‘இனிமேல் இஜ்விதான் ஜெருசலேம் யூதர்களுக்குப் பாதுகாவலர். விரைவில் அவர் துருக்கிய சுல்தானை வீழ்த்தி, சிதறிக்கிடக்கும் யூதகுலத்தை ஜெருசலேத்துக்கு மீண்டும் அழைத்து வருவார்’ என்று அறிவித்தார்.

இது ஜெருசலேத்தில் இருந்த யூதகுருமார்களின் சபையின் தலைவர்களுக்குக் கொஞ்சம் தர்மசங்கடத்தை விளைவித்தது. இருந்திருந்து, அப்போதுதான் அவர்கள் கொஞ்சம் நிம்மதியாக உண்டு, உறங்கத் தொடங்கியிருந்தார்கள்.

துருக்கியின் சுல்தான் எவ்விதப் பிரச்னையும் இல்லாமல் யூதர்கள் வாழ்வதற்கு வழிகள் செய்திருந்தார்.

எங்கே இந்த ஆள் அதைக் கெடுத்துவிடப்போகிறாரே என்கிற கவலை அவர்களுக்கு. அதேசமயம் இஜ்விக்கு மக்கள் செல்வாக்கும் பெருகிக்கொண்டிருந்ததை அவர்கள் கவனிக்கத் தவறவில்லை.

சரி, இவர் நிஜமாகவே தேவதூதர்தானா என்று கொஞ்சமாவது பரீட்சை செய்து பார்ப்போம் என முடிவு செய்து, இஜ்வியை அழைத்தார்கள். ஆனால் அவர் பரீட்சை எதற்கும் உட்பட மறுத்துவிட்டார். ‘என்னை நம்புங்கள்.

என்னைப் பரிசோதிக்க நீங்கள் யாரும் லாயக்கில்லை’ என்று சொல்லிவிட்டார். அதற்கு மேல் ஜெருசலேத்தில் இருக்க விரும்பாத இஜ்வி, ஊருக்கும் புறப்பட்டுவிட்டார். ஒரு பதினைந்து வருடகாலம் வேறு வேறு தேசங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுவிட்டு ஊர் திரும்பியவர், “கி.பி. 1666-ம் வருடம் நான் ஒரு சிங்கத்தின் மீதேறி ஜெருசலேத்துக்குச் செல்வேன். அப்போது ஜெருசலேம் நம்முடைய மண்ணாக இருக்கும்” என்று அறிவித்தார்.

அதோடு நிறுத்திக்கொண்டிருக்கலாம். யூத மதத்துக்குள் ஏகப்பட்ட புதிய சட்டதிட்டங்களைக் கொண்டுவந்து, ஒரு இருபத்தைந்து இடங்களைத் தேர்ந்தெடுத்து அவையனைத்தும் தனித்தனி சமஸ்தானங்கள் என்றும் ஒவ்வொரு சமஸ்தானத்துக்கும் ஒவ்வொரு மன்னரை நியமித்து, ‘மன்னர்களின் மன்னர்’ என்று தமது சகோதரர் ஒருவரை அறிவித்து இல்லாத கூத்தெல்லாம் செய்து விட்டார்.

இத்தனையையும் துருக்கி சுல்தான் பொறுமையுடன் பார்த்துக் கொண்டிருந்தார். ஒருமாதிரி பெரிய ஆதரவாளர் படையுடன் அவர் இஸ்தான்புல்லை நோக்கி வந்துகொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டதும் ‘இதுதான் எல்லை’ என்று முடிவு செய்தார், சுல்தான். நேரே போய் கழுத்தில் கத்தி வைத்து கைது செய்துவிட்டது துருக்கிய ராணுவம்.

யூதர்களால், தங்களது இறைத்தூதர் கைது செய்யப்பட்டுவிட்ட சம்பவத்தை நம்பவே முடியவில்லை.

இருப்பினும் அப்போதுகூட, ‘ஏதோ அதிசயம் நிகழப்போகிறது, கடவுளே நேரில் தோன்றி, சுல்தானுக்கு உரிய தண்டனை தரப்போகிறார்’ என்று எதிர்பார்த்து நகம் கடித்துக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் கடவுள் அப்போது ஒரு முடிவில்தான் இருந்தார் போலிருக்கிறது. இஜ்வி, இஸ்தான்புல் சிறைச்சாலையில் களிதான் சாப்பிட்டுக்கொண்டிருந்தார்.

அவருக்கு இரண்டு சாத்தியங்களை மட்டுமே சுல்தான் தந்தார்.
1. மரியாதையாக முஸ்லிமாக மாறிவிடுங்கள்.
2. அல்லது உயிரை விடத் தயாராகுங்கள்.
யூதர்களின் இறைத்தூதராக, இறைத்தூதர்களுக்கெல்லாம் அரசராகத் தன்னை அறிவித்துக்கொண்டு சுமார் பதினைந்து ஆண்டுகாலம் கலாட்டா செய்துகொண்டிருந்த இஜ்வி, அப்போது எடுத்த முடிவு, உயிர்பிழைக்க முஸ்லிமாக மாறிவிடலாம் என்பதுதான்!

ஒரு தலைப்பாகையை விரித்து மண்டியிட்டு, மன்னரிடம் தமது முடிவைச் சொன்னார். உயிர்ப்பிச்சை கேட்டார். அந்தக் கணமே முஸ்லிமாக மாறினார். அவருக்கு மேமத் எஃபெண்டி என்கிற புதிய முஸ்லிம் பெயர் சூட்டப்பட்டது. சுல்தான் அவரை மன்னித்துவிட்டார். கூடவே (ராஜ வாயில்காப்போன்!) என்றொரு பட்டத்தையும் கொடுத்து வாழ்நாள் முழுவதற்கும் பென்ஷன் தருவதாகவும் சொன்னார்.

இஜ்வியின் தோழர்களுக்கும் தொண்டர்களுக்கும் இது மிகவும் கசப்பான அனுபவமாகப் போய்விட்டது. ஒரு போலி இறைத்தூதரை நம்பி இத்தனை நாட்களை வீணாக்கிவிட்டோமே என்று அவர்கள் மனத்துக்குள் பலகாலம் அழுதுதீர்த்தார்கள். பெரும்பாலான யூதகுலத்தவருக்கே இது ஒரு அழிக்கமுடியாத கறை என்று தோன்றிவிட்டது. கஷ்டப்பட்டு, நடந்ததை மறந்துவிட அவர்கள் விரும்பினார்கள்!

இதில் அதிகபட்ச நகைச்சுவை ஒன்று உண்டு. இத்தனை நடந்தபிறகும் இஜ்வியை இறைத்தூதர்தான் என்று யூதர்களில் சிலர் நம்பினார்கள். அவர் முஸ்லிம் ஆனபோது, அதுதான் உய்வதற்கு வழிபோலிருக்கிறது என்று நம்பி, தாங்களும் முஸ்லிமாக மாறிவிட்டார்கள்!
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 20 மார்ச், 2005
****************************************
தொடரும்... மீண்டும் வாருங்கள்.

வாச‌கர்க‌ளே இஸ்லாமிய‌ வ‌ரலாறுக‌ளில்,யூதர்கள் தொன்று தொட்டு வளர்த்து வரும் சூழ்ச்சிகள், பாலஸ்தீனின் வரலாறு மற்றும் நாம் அறிந்திராத‌ ப‌ல‌ விஷ‌ய‌ங்க‌ள் இதில் ப‌டித்து நாம் தெரிந்து கொள்ள‌லாம்.
அனைவருக்கும் இதை தெரியப்படுத்தி படிக்கச் செய்யுங்கள்.
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

No comments: