Monday, April 13, 2009

97.98. இஸ்ரேல் அரசு திருந்திவிட்டதா? பாலஸ்தீன் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?பகுதி 97-98.

97] இஸ்ரேல் அரசு திருந்திவிட்டதா?
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 97.

ஆயிரத்தெட்டு பிரச்னைகள் இருந்தாலும் திட்டமிட்டபடி, ஜனவரி 9_ம் தேதி பாலஸ்தீன் அதிபர் தேர்தல் நடக்கத்தான் செய்தது; மம்மூத் அப்பாஸ் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுவதில் பிரச்னை ஏதும் வரவில்லை.

ஹமாஸின் கோபம், அர்த்தமில்லாததல்ல. எங்கே மீண்டும் தமது மக்கள் ஏமாற்றப்படப் போகிறார்களோ என்கிற பதைப்பில் வந்த கோபம் அது.

ஆனால், பாலஸ்தீன் அத்தாரிடியினரும் பிற போராளி இயக்கங்களும் 'தேர்தல் முதலில் ஒழுங்காக நடக்கட்டும்; மற்றவற்றைப் பிறகு பேசிக்கொள்ளலாம்' என்று ஹமாஸ் தலைவர்களிடம் எடுத்துச் சொல்லி சமாதானப்படுத்தியதன் விளைவாக, தேர்தல் நடந்தது.

வெற்றிபெற்ற கையோடு, அப்பாஸ், ஹமாஸ் உள்ளிட்ட அத்தனைப் போராளி இயக்கங்களுக்கும் ஒரு கோரிக்கை வைத்தார். தயவுசெய்து துப்பாக்கிகளைக் கீழே போடுங்கள். யுத்தத்தை நிறுத்துங்கள். இஸ்ரேலியப் படையிடமிருந்து உங்களைக் காப்பாற்றுவது என்னுடைய பொறுப்பு. அதேபோல், பிரச்னைக்கு ஒரு நிரந்தரத் தீர்வு காணுவதற்கும் நானே பொறுப்பு.

இந்தக் கோரிக்கை இஸ்ரேலுக்குப் பிடிக்கவில்லை.

போராளிகளிடம் அப்பாஸ் கெஞ்சுகிறார் என்று விமர்சித்தது. கைது செய்து உள்ளே தள்ளுங்கள் என்று கத்தியது.

அதுமட்டுமல்லாமல், அல் அக்ஸா தற்கொலைப் படையினர் மற்றும் ஹமாஸ் தலைவர்களுடன் அப்பாஸ் இருப்பது போன்ற பழைய புகைப்படங்களைத் தேடியெடுத்து, அப்பாஸ் தீவிரவாத இயக்கங்களுடன் வைத்திருக்கும் தொடர்பு கவலையளிக்கிறது என்று பேசினார் ஏரியல் ஷரோன்.

ஷரோனின் இந்தப் புதிய கவலைக்கு அமெரிக்காவிலிருந்து காலின் பாவெல் பக்கவாத்தியம் வாசித்தார்.

அமைதியை நோக்கிய பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள். அதை விட்டுவிட்டு, தீவிரவாதிகளுடன் கொஞ்சிக் கொண்டிருக்காதீர்கள் என்றார் அவர்.

சொல்லிவைத்தமாதிரி ஜனவரி 13_ம் தேதி காஸா முனையில் ஒரு தற்கொலைப்படைத் தாக்குதல் நடைபெற்றது. ஆறு யூதர்கள் பலியான அந்தச் சம்பவத்தைக் காரணமாக வைத்து, ஏரியல் ஷரோன் மிகக் கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

'இனி எக்காரணம் கொண்டும் பாலஸ்தீன் அத்தாரிடியுடன் பேச்சுவார்த்தை இல்லை. தீவிரவாதத்தை அப்பாஸ் முழுமையாகக் கட்டுப்படுத்தினாலொழிய அமைதிப்பேச்சு சாத்தியமில்லை. பாலஸ்தீன் அத்தாரிடியுடனான அத்தனை தொடர்புகளையும் அப்படி அப்படியே நிறுத்தி வைக்கிறோம்' என்று சொல்லிவிட்டார்.

இதெல்லாம் எப்பேர்ப்பட்ட நகைச்சுவை!

அதிபராகத் தேர்வான மம்மூத் அப்பாஸ், இன்னும் ஒரு நாள்கூட பாராளுமன்றம் சென்று, நடவடிக்கை எதையும் தொடங்கியிருக்கவில்லை அப்போது!

அதற்குள் உறவை முறித்துக்கொள்ள ஒரு சாக்கு.

தான் பதவி ஏற்பதற்கு முன்னதாகவே, போராளி இயக்கங்களை அமைதி காக்க வேண்டுகோள் விடுத்த அப்பாஸுக்கு இன்னும் அதற்கான பதில் கூட வரவில்லை.

அவரது கோரிக்கை, ஹமாஸ் உள்ளிட்ட இயக்கங்களின் தலைவர்களின் கரங்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்குமா என்பது கூடச் சந்தேகமே. (அத்தனை தலைவர்களும் சிரியாவில் இருந்தார்கள்.

தேர்தலில் வென்றதற்கு மறுநாள் மாலை அதாவது, பத்தாம்தேதி மாலை அப்பாஸ் அறிக்கை வெளியிட்டார். பதிமூன்றாம் தேதி இந்தத் தற்கொலைப் படைத் தாக்குதல் நடைபெற்றது.

ஒருவேளை இது முன்னமேயே திட்டமிடப்பட்டிருக்கலாம். அல்லது அப்பாஸின் அறிக்கைக்குப் பிறகே கூடத் தீர்மானிக்கப்பட்டிருக்கலாம். சரியான விவரம் தெரியவில்லை.)

ஒரு வார அவகாசம் கூடத் தராமல் உறவு முறிவு என்று அறிவித்தால், என்ன அர்த்தம்?

ஆனாலும் அப்பாஸ் தன்னாலான அத்தனை முயற்சிகளையும் உடனடியாக மேற்கொண்டார். பாலஸ்தீன் அத்தாரிடியின் காவல் துறையினரை, மொத்தமாகத் திரட்டி காஸாவுக்கு முதலில் அனுப்பினார்.

அங்குள்ள யூதக் குடியிருப்புகளுக்கு வலுவான காவல் ஏற்பாடுகளை முதலில் செய்துவிட்டு, போராளி இயக்கங்களின் ராக்கெட் தாக்குதலுக்குத் தடுப்பு அரண்கள் ஏற்படுத்தி, ராக்கெட் எதிர்ப்பு பீரங்கிகளையும் அங்கே கொண்டு நிறுத்தச் சொன்னார்.

இவற்றைச் செய்த கையோடு போராளி இயக்கங்களின் தலைவர்களுக்கும் உருக்கமான வேண்டுகோள் விடுத்தார். தயவுசெய்து அமைதி காக்கவேண்டும். எனக்குச் சற்று அவகாசம் கொடுங்கள். ஏதாவது நல்லது நடக்குமா என்றுதான் நானும் பார்க்கிறேன்.

உங்கள் ஒத்துழைப்புடன்தான் எதுவுமே சாத்தியம் என்று கெஞ்சினார். இஸ்ரேல் என்ன கிண்டல் செய்தாலும், எத்தனை அவமானப்படுத்தினாலும் இயக்கங்களின் ஒத்துழைப்பு இல்லாமல் பாலஸ்தீனில் அமைதி இல்லை என்பது அப்பாஸுக்குத் தெரியும்.

அப்பாஸின் இந்த முயற்சிகள் ஓரளவு பலனளித்தன என்றுதான் சொல்லவேண்டும்.

எந்த அளவுப் பலன் என்றால், ஏரியல் ஷரோன் கொஞ்சம் இறங்கிவந்து, 'ஆமாம், நீங்கள் அமைதிக்கான முயற்சிகளை எடுக்கத்தான் செய்கிறீர்கள், உங்களுடன் உட்கார்ந்து பேசலாம் என்று முடிவு செய்திருக்கிறேன்' என்று சொல்லும் அளவுக்கு.

2005 பிப்ரவரி 8_ம் தேதி எகிப்தில் உள்ள ஷாம் அல் ஷேக் (Sharm al Sheikh) என்கிற இடத்தில் அந்தப் பிரசித்தி பெற்ற அமைதி மாநாடு நடைபெற்றது.

எகிப்து அதிபர் ஹோஸினி முபாரக், ஜோர்டன் மன்னர் இரண்டாம் அப்துல்லா ஆகியோர் முன்னிலையில் ஏரியல் ஷரோனும் மம்மூத் அப்பாஸும் கைகுலுக்கிக்கொண்டு ஓர் ஒப்பந்தம் செய்துகொண்டார்கள்.

இதனை அமைதி ஒப்பந்தம் என்று சொல்வதைக் காட்டிலும் போர் நிறுத்த ஒப்பந்தம் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். பாலஸ்தீன் தரப்பில், அனைத்துப் போராளி இயக்கங்களும் இஸ்ரேலிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்துவதை நிறுத்தும் என்று அப்பாஸும், அதே போல, பாலஸ்தீனிய இலக்குகள் மீது இஸ்ரேல் பாதுகாப்புப்படை இனி தாக்குதல் நடத்தாது என்று ஏரியல் ஷரோனும், ஒருவருக்கொருவர் உறுதிமொழி அளித்தார்கள்.

இந்தப் போர்நிறுத்த உடன்படிக்கை ஏற்படக் காரணமாக இருந்தவர், எகிப்து அதிபர் ஹோஸினி முபாரக்.

மறுநாளே உலகெங்கும் உள்ள நாளிதழ்கள் இந்தச் சம்பவத்துக்கு சிறப்பிடம் கொடுத்து, முதல் பக்கத்தில் பெரிய அளவில் பிரசுரித்து சந்தோஷப்பட்டன.

ஒரு வழியாக, பாலஸ்தீனுக்கு அமைதி வந்துவிட்டது என்று இனிப்பு கொடுத்துக் கொண்டாடினார்கள். ஏரியல் ஷரோனும் அப்பாஸும் கட்டிப்பிடித்து போஸ் கொடுத்துவிட்டு, முபாரக்குடன் கைகுலுக்கிவிட்டு ஊர் போய்ச் சேர்ந்தார்கள்.

உண்மையில் நடந்தது என்னவென்பது, கடந்த எட்டு மாதகால சம்பவங்களைக் கவனமாகப் பின்பற்றி வரும் அனைவருக்குமே தெரியும்!

பாலஸ்தீன் போன்ற சிக்கல் மிக்க பிராந்தியத்தில், போராளி இயக்கங்களைக் கலந்தாலோசிக்காமல் அரசாங்கங்கள் எடுக்கும் எந்த முடிவாலும் பிரயோஜனமில்லை என்பதுதான், அத்தேசத்தின் கடந்த ஐம்பதாண்டுகால சரித்திரம் சுட்டிக்காட்டி வந்திருக்கிறது.

ஹமாஸ், இஸ்லாமிக் ஜிகாத் போன்ற அமைப்புகளைத் தீவிரவாத இயக்கங்கள் என்று இடதுகையால் ஒதுக்கிவிட்டு, நாமாக ஒரு முடிவெடுக்கலாம் என்று நினைப்பது, உண்மையிலேயே முட்டாள்தனமானது.

ஏனென்றால், அந்த அமைப்புகளுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு அங்கே ஆளும் வர்க்கத்தினருக்குக் கிடையாது என்பதை, நம்பமுடியாவிட்டாலும் ஜீரணித்துத்தான் ஆகவேண்டும்.

மேற்படி போர் நிறுத்த ஒப்பந்தம் நடந்தவுடனேயே இது குறித்துக் கருத்துத் தெரிவித்த ஹமாஸ், 'இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேலிய ராணுவமே பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை; நாங்கள் எதற்காக இதைப் பொருட்படுத்த வேண்டும்?' என்று கேட்டது.

ஏரியல் ஷரோன் இதனை உடனடியாக மறுத்தாலும் பின்னர் நடந்த சம்பவங்கள், இதைத்தான் உண்மை என்று நிரூபித்தன. ஒரு பக்கம் இஸ்ரேல் அரசு எந்தத் தாக்குதல் நடவடிக்கையும் நடைபெறவில்லை என்று சொல்லிக் கொண்டிருக்கும்போதே, காஸாவில் சில குடியிருப்புப் பகுதிகள் தாக்கப்படும்.

இங்கே மேற்குக்கரைப் பகுதியில், வழியோடு போகும் யாராவது நாலு பாலஸ்தீனியர்களை, இழுத்து வைத்துக் கட்டி உதைத்துக் கைது செய்துகொண்டு போய்விடுவார்கள். அந்தச் செய்தி வந்த மறுகணமே இந்தச் செய்தியும் சேர்ந்து வரும்!

இந்த அபத்தங்கள் தலைவர்களுக்குத்தான் உறைக்கவில்லையே தவிர, ஒப்பந்தம் கையெழுத்தானவுடனேயே இப்படித்தான் நடக்கும் என்று ஹமாஸ் சொல்லிவிட்டது!

ஹாஸன் யூஸுஃப் என்கிற ஹமாஸின் மூத்த தலைவர் ஒருவர், அல் ஜஸீரா தொலைக்காட்சிக்கு ஒரு பேட்டியளித்தார். அந்தப் பேட்டியில், 'அப்பாஸின் போர் நிறுத்த அமைதி நடவடிக்கையை நாங்கள் எதிர்க்கவில்லை. கூடியவரை ஒத்துழைப்பு அளிக்கத்தான் பார்ப்போம்.

ஆனால், பாலஸ்தீனியர்கள் மீது எங்கெல்லாம் தாக்குதல் நடக்கிறதோ, அங்கெல்லாம் ஹமாஸ் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தத் தயங்காது' என்று சொன்னார்.

அப்படித்தான் தொடங்கியது. மூன்று மாதங்கள். மே, ஜூன் மாதங்களில் 'புதிய ஏற்பாடு'களெல்லாம் ஒதுக்கிவைக்கப்பட்டு, பழையபடி இருதரப்பிலும் அடித்துக்கொள்ளத் தொடங்கிவிட்டார்கள்.

பழையபடியே, ஒருவரையொருவர் குற்றம் சாட்டிக்கொண்டு, பழையபடியே ஆக்கிரமிப்புகள் செய்துகொண்டு, பழையபடியே தற்கொலைப்படைத் தாக்குதல்கள் நடத்தி, பழையபடியே பஸ் குண்டுகள் வைத்து..
அராஃபத் இறந்தால் அமைதி என்று சொன்ன இஸ்ரேல் இப்போது என்ன சொல்கிறது?

இதைத்தான் உலகம் கேட்டது. இஸ்ரேலின் உயிர்த்தோழனான அமெரிக்காவே கேட்டது. ஐ.நா.வின் பாதுகாப்பு கவுன்சில் கேட்டது. அத்தனை முஸ்லிம் தேசங்களும் கேட்டன.

அமைதிக்காக மாநாடு கூட்டி டிபன் காபி கொடுத்து, கைகுலுக்கி அனுப்பிவைத்த ஹோஸினி முபாரக் கேட்டார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, இஸ்ரேலில் நடக்கப்போகிற பொதுத்தேர்தல் கேட்டுக்கொண்டிருக்கும் மௌனக் கேள்வியும் இதுதான். என்ன செய்யப்போகிறார்கள்?

ஏதாவது செய்துதான் ஆகவேண்டும். ஆனால், நிரந்தரத் தீர்வுக்கெல்லாம் இப்போது சாத்தியமில்லை. அதாவது விருப்பமில்லை. ஆகவே, தாற்காலிகமாக அமைதியைக் கொண்டுவருவதற்கு ஷரோன் ஓர் உபாயம் செய்தார்.

பழைய ஒப்பந்தங்களை எடுத்து, தூசி தட்டிப் படித்துப் பார்த்தார். தனக்கு உடனடியாக நல்லபெயர் கொண்டுவந்து சேர்க்கக்கூடிய காரியம் எதுவாக இருக்கும் என்று யோசித்தார்.

வேறு வழியில்லை. பாலஸ்தீன் அத்தாரிடியின் அதிகார எல்லைக்குட்பட்ட இடங்களில் இருக்கும் யூதக் குடியிருப்புகளையெல்லாம் காலி செய்துவிடுகிறோம் என்று அறிவித்துவிட்டு, வேலையை ஆரம்பித்தார்.

அபாரமான முடிவுதான். அமைதிக்கான மிகப்பெரிய முயற்சியும் கூட. சந்தேகமே இல்லை.

கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து இந்தச் செய்தியை அடிக்கடி செய்தித்தாள்களில் படித்துக்கொண்டும் தொலைக்காட்சிகளில் பார்த்துக்கொண்டும் இருந்திருப்பீர்கள்.

இந்தக் காலகட்டத்தில், பாலஸ்தீனில் போராளி இயக்கங்களின் தாக்குதல் நடவடிக்கைகளும் கணிசமாகக் குறைந்திருப்பதையும் கவனித்திருக்கலாம்.

திடீரென்று, இஸ்ரேல் இப்படியொரு நடவடிக்கை எடுக்கக் காரணம் என்ன?

பல்லாண்டுகளாக ஓரிடத்தில் வசித்துக்கொண்டிருக்கும் தமது மக்களை, அது அத்துமீறிய குடியேற்றமே என்றபோதிலும், அப்படிச் செய்ததும் இஸ்ரேல் அரசுதான் என்ற போதிலும் - வலுக்கட்டாயமாக வெளியேற்றி, ஊரை காலிபண்ணிக்கொண்டு போகச் சொல்லுமளவுக்கு,

இஸ்ரேல் அரசு திருந்திவிட்டதா? உண்மையிலேயே அமைதியை நோக்கி நகர ஆரம்பித்துவிட்டார்களா? சுதந்திர பாலஸ்தீன் கண்ணுக்கெட்டும் தூரத்தில்தான் இருக்கிறதா? இத்தனை ஆண்டுகாலப் போராட்டமெல்லாம் ஒரு முடிவுக்கு வரப்போகிறதா?

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 3 நவம்பர், 2005

98] பாலஸ்தீன் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 98

மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில் 1977_ம் ஆண்டு தொடங்கி நிறுவப்பட்ட அத்துமீறிய யூதக் குடியிருப்புகளை இஸ்ரேல் இப்போது காலி செய்ய முடிவு செய்து நடவடிக்கை மேற்கொண்டது. இது சர்வதேச அளவில் கவனம் பெற்றதையும், அனைத்துத் தரப்பினரும் ஏரியல் ஷரோனைப் பாராட்டுவதையும் பார்த்தோம்.

அரேபியர்கள் வாழும் பகுதிகளில் வசித்து வந்த யூதர்கள் அத்தனை பேரையும் வலுக்கட்டாயமாக வெளியேற்றுவதன்மூலம், அரேபியர்களின் நிலப்பகுதி அவர்களுக்கே சொந்தம் என்பதாக இஸ்ரேல் ஒப்புக் கொள்வதாகிறது.

அமைதி நடவடிக்கை இதே ரீதியில் அடுத்த கட்டத்தை நோக்கி நகருமானால், காஸா பகுதியில் எப்போதும் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேலிய ராணுவம், அடுத்தபடியாக முழுவதுமாக விலக்கிக் கொள்ளப்படும்.

காஸாவை ஒட்டிய கடல் எல்லைகளும் பாலஸ்தீன் அத்தாரிடியின் முழுக் கட்டுப்பாட்டுக்கு அடுத்தபடியாக வந்து சேரும்.

அதற்குமேல் ஒன்றுமில்லை. பூரண சுதந்திரம்தான்.

அவ்வளவுதானா? இதனை நோக்கித்தான் இஸ்ரேல் போய்க்கொண்டிருக்கிறதா? என்றால், இப்போதைக்கு பதில் 'இல்லை' என்பதுதான்.

குடியேற்றங்களைக் காலி செய்வதென்று இஸ்ரேல் எடுத்த முடிவு தாற்காலிக நடவடிக்கைதான்.

இஸ்ரேலில் விரைவில் பொதுத்தேர்தல் நடைபெறவிருக்கிற சூழ்நிலையில் பாலஸ்தீன் போராளி இயக்கங்களைச் சற்றே அமைதிப்படுத்தி வைக்க மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையே இது.

மிக அதிக விலை கொடுத்துத்தான் இஸ்ரேல் இந்த நடவடிக்கையை எடுத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை.

ஆனால், எப்போது தேவைப்பட்டாலும் பாலஸ்தீன் எல்லைக்குள் திரும்பவும் தனது அதிகார மேலாதிக்கத்தை நிறுவிக்கொள்ள முடியும் என்கிற நம்பிக்கையில் செய்யப்பட்ட காரியம்தான் இது.

ஏனெனில் முப்பது நாற்பது வருடங்களாக, ஒரே இடத்தில் வசித்துவந்த ஆயிரக்கணக்கான மக்களை, நாற்றைப் பிடுங்கி நடுவது போலப் பிடுங்கிக்கொண்டுபோய் வேறிடத்தில் வாழச் சொல்லுவதென்பது யூதர்கள் மத்தியில் மிகப்பெரிய அச்சத்தை உருவாக்கியே தீரும்.

இதற்கான அரசியல் நியாயங்கள் ஏரியல் ஷரோனுக்கு இருக்கலாம். இஸ்ரேல் மக்களுக்கு இதில் எந்த நியாயமும் தெரிவதற்கு நியாயமில்லை!

அரசாங்கம்தான் அவர்களுக்கு வீடு கட்டிக்கொடுத்துக் கொண்டுபோய் மேற்குக் கரையிலும் காஸாவிலும் குடிவைத்தது. அதே அரசு இப்போது வலுக்கட்டாயமாக வெளியேற்றி, குடியிருப்புகளை இடித்துத் தரைமட்டமாக்கியும் இருக்கிறது.

பாலஸ்தீனியர்களின் அமைதிக்காகத் தங்கள் அமைதி பறிபோவதை யூதர்கள் ஒருபோதும் சம்மதிக்கமாட்டார்கள்.

போராளி இயக்கங்கள் அமைதி காத்து, இஸ்ரேல் பொதுத்தேர்தல் வேண்டுமானால் பிரச்னையில்லாமல் நடக்கலாம். ஆனால், இஸ்ரேலியர்கள் அடுத்து அமையப்போகும் அரசை நிம்மதியாக இருக்கவிடமாட்டார்கள்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதற்காக ஷரோன் இப்படியொரு காரியம் செய்யவேண்டும் என்று கேட்டால், அதற்கும் ஒரே பதில்தான். முன்னரே நாம் பார்த்துவிட்ட பதிலும் கூட. அராஃபத்துக்குப் பிறகு அமைதி!

அதை நிரூபிப்பதற்காகச் செய்யப்பட்ட காரியமே தவிர வேறில்லை.
என்றால், பாலஸ்தீன் பிரச்னைக்குத் தீர்வுதான் என்ன?

நான்காயிரம் ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு விதமான வடிவங்களில் அங்கே உலவிக்கொண்டிருப்பது பிரச்னை ஒன்றுதானே தவிர, அமைதி அல்ல. சமகாலம் நமக்குத் தெரிகிறது. சரித்திரத்தைப் படித்துத் தெரிந்துகொள்கிறோம். புராணங்கள் கதை வடிவில் கிடைக்கின்றன. எந்தக் காலத்திலும் பிரச்னை மட்டும் ஒன்றுபோலவேதான் இருந்துவந்திருக்கிறது.

தலைவர்கள் மாறலாம், ஆட்சி மாறலாம், அதிகாரம் மாறலாம். அவ்வப்போது அமைதி ஒப்பந்தங்கள் அரங்கேறலாம். நிரந்தரத் தீர்வு என்கிற மாபெரும் கனவு நனவாவதற்கு எதுதான் தடையாக இருக்கிறது?

முதலாவது காரணம், இஸ்ரேலிய ஆட்சியாளர்கள். அடிப்படையில் அவர்களுக்கு பாலஸ்தீனை ஒரு சுதந்திர தேசமாக வாழவிடுவதில் விருப்பம் இல்லை.

அரேபியர்களால் யூதர்களுக்கு எப்போதும் ஆபத்துதான் என்பது அவர்களது கருத்து. அடக்கிவைத்திருக்கும் வரைதான் ஜீவித்திருக்க முடியும் என்பது யூதர்கள் தமக்குத்தானே வகுத்துக்கொண்டுவிட்ட சித்தாந்தம்.

சரித்திரம் முழுவதும் ஒதுங்க ஓரிடமில்லாமல் தேசம் தேசமாக ஓடிக்கொண்டிருந்த இனம் அது.

எத்தனையோ போராடி, எவ்வளவோ சூழ்ச்சிகள் செய்து, பிச்சை எடுத்து, கெஞ்சிக் கூத்தாடி, படாதபாடு பட்டு 1948_ம் ஆண்டு இஸ்ரேல் என்கிற ஒரு யூத தேசத்தை அவர்கள் தமக்குத் தாமே உருவாக்கிக்கொண்டார்கள்.

அப்படி உருவானதற்கு அவர்கள் பாலஸ்தீன் அரேபியர்களைத்தான் களப்பலியாகக் கொடுக்கவேண்டியிருந்தது.

ஆயிரம் அமைதி பேசினாலும் இந்த அடிப்படைப் பகை இரு தரப்புக்கும் எந்தக் காலத்திலும் மனத்திலிருந்து அழியப்போவதில்லை.

ஆகவே, இப்போது பாலஸ்தீனுக்கு சுதந்திரம் வழங்கிவிட்டால் நிரந்தர அண்டைநாட்டுச் சண்டை என்றாகிவிடும். தவிரவும் சுதந்திரமடைந்த பாலஸ்தீன், பிற அரபு தேசங்களுடன் இணைந்து இஸ்ரேலைத் தாக்கலாம்.

சுதந்திரம், தனி நாடு என்கிற சந்தோஷம், ஒரு தேசத்து மக்களுக்கு எத்தனை மானசீக பலம் தரும் என்பதற்கு இஸ்ரேல் பிறந்தபோது கண்ட மாபெரும் வெற்றிகளே சாட்சி. அந்த வாய்ப்பைத்தான் அவர்கள் இப்போது பாலஸ்தீனுக்குத் தருவதற்குத் தயங்குகிறார்கள்.

அடுத்தபடியாக பாலஸ்தீனுக்கு சுதந்திரம் என்று பேசினால், ஜெருசலேம் யாருடையது என்கிற கேள்விக்கு முதலில் பதில் கண்டுபிடித்தாக வேண்டும். குறிப்பாக அந்த மசூதி வளாகம்.

பாபர் என்கிற ஒரு மன்னர் கட்டிய மசூதியை இங்கே இடித்துவிட்டு இன்று வரையிலும் நாம் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் சிக்கல்களை எண்ணிப் பார்க்கலாம்.

ஜெருசலேத்தில் இருக்கும் மசூதி பாபரைப்போல் ஒரு மன்னர் தொடர்புடையது அல்ல.

இஸ்லாத்தைத் தோற்றுவித்தவரான முகம்மது நபியுடன் நேரடியாகச் சம்பந்தமுள்ளது.

ஒவ்வொரு இஸ்லாமியருக்கும் அது ஒரு புனிதத்தலம். மெக்காவில் உள்ள க'அபாவுக்கு அடுத்தபடியாக ஜெருசலேம் மசூதிதான் அவர்களுக்கு.
அப்படிப்பட்ட தலத்தை இடித்து அகழ்வாராய்ச்சி செய்து அங்கே இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் சாலமன் மன்னர் கட்டிய கோயில் இருக்கிறதா என்று பார்க்க நினைப்பதை எந்த முஸ்லிமாலும் சகித்துக்கொள்ளமுடியாது.


இதுவரை செய்யப்பட்ட ஆராய்ச்சிகளில் உருப்படியாக ஓர் ஆதாரமும் அகப்படாத நிலையில் தொடர்ந்து அங்கே இஸ்ரேலிய அரசு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ள நினைப்பது அரசியலே அல்லாமல் வேறல்ல. உயிரை விடாமல் நின்றுகொண்டிருக்கும் ஓர் உடைந்த ஒற்றைச்சுவர்தான் யூதர்களின் ஆதாரம். அந்தச் சுவர் சாலமன் மன்னர் எழுப்பிய ஆலயத்தின் சுற்றுச்சுவர் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

எத்தனை நூற்றாண்டுகளானாலும் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடையாது. ஆகவே ஜெருசலேம் ஒரு நிரந்தரப் பிரச்னை பூமியாகிறது.

இந்நிலையில் ஒருவேளை பூரண சுதந்திரமே கிடைத்தாலும் ஜெருசலேம் அல்லாத சுதந்திரத்தை முஸ்லிம்கள் மனமுவந்து ஏற்பது சாத்தியமே இல்லை.


ஜெருசலேத்தை மையமாக வைத்து அடுத்தபடியாக யுத்தம் ஆரம்பமாகும். சொல்லப்போனால் இதுவரை நடந்தவற்றைக் காட்டிலும் உக்கிரமடையவும் வாய்ப்புகள் அதிகம்.

இரண்டாவது தடை, போராளி இயக்கங்களின் செயல்பாடு. நவீன உலகில் இன்று ஆயுதப்போராட்டங்கள் வெற்றி அடைவதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவு.

ஆயுதம் தாங்கியவர்களை உலகம் எப்போதும் அச்சத்துடன் மட்டுமே பார்க்கும். நெருங்கிப் பேசத் தயங்குவார்கள். போராளிகளை விலக்கிவிட்டு, அமைதிப்பேச்சுவார்த்தை நடத்தவே பெரும்பாலான அரசுகள் விரும்புகின்றன.

பாலஸ்தீன் போன்ற தேசத்தில் அது சாத்தியமில்லை என்று தெரிந்தாலுமே கூட தொடர்ந்து அதையே ஏன் செய்துவருகிறார்கள் என்று யோசித்துப் பார்க்கலாம்.

தாற்காலிகமாகவாவது இயக்கங்கள் போர் நிறுத்தம் அறிவித்துவிட்டு அமைதிப் பேச்சுக்கு உடன்பட்டால் ஓரளவு நியாயமான பலன்களை எதிர்பார்க்க முடியும்.

யாசர் அராஃபத் அமைதிக்குப் பச்சைக்கொடி காட்டிய அதே சந்தர்ப்பத்தில் ஹமாஸும் அவருக்குத் தோள் கொடுத்திருந்தால் நிலைமை வேறு விதமாகியிருக்கும்.

ஹமாஸ் ஓர் அரசியல் இயக்கமல்ல என்பதை ஒரு காரணமாகச் சொல்ல முடியாது. பாலஸ்தீனைப் பொறுத்தவரை அரசியல் தொடங்கி அமைதி வரை தீர்மானிக்கும் மிகப்பெரிய சக்தி அது. ஆனால், அவர்கள் செய்யவில்லை. இதற்கு யாரைக் குறை சொல்ல முடியும்?

பாலஸ்தீன் பிரச்னைக்குத் தீர்வு காணத் தடையாக இருக்கும் மூன்றாவது அம்சம், அரபு நாடுகளின் ஒற்றுமையின்மை. சற்று யோசித்துப் பாருங்கள்.

இஸ்ரேல் என்பது மிகச் சிறியதொரு தேசம். யூத இனம் என்பது ஒப்பீட்டளவில் மிகக்குறைவான எண்ணிக்கையே கொண்ட மக்களால் ஆனது. அவர்களால் ஒற்றுமையாகச் செயல்பட்டுத் தமக்கென ஒரு தேசத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்திருக்கிறது.

ஆனால் பல கோடிக்கணக்கான மக்களுடன் உலகின் இரண்டாவது பெரிய மதம் என்கிற பெயருடன் விளங்கும் இஸ்லாத்தைச் சேர்ந்தவர்களால் ஏன் தமது இன மக்களுக்கு உதவி செய்ய முடியவில்லை?

உலகில் வசிக்கும் முஸ்லிம்களுள் பெரும்பான்மையானோர் மத்தியக் கிழக்கில்தான் இருக்கிறார்கள். மத்தியக் கிழக்கில் இஸ்ரேல் தவிர மற்ற அனைத்து தேசங்களுமே இஸ்லாமிய தேசங்கள்தான். அவர்கள் ஒன்று சேர்ந்து பாலஸ்தீன் பிரச்னைக்கு ஒரு முடிவு காண முடியாதா?

அமைதித் தீர்வைக் கூட விட்டுவிடலாம். 1948 தொடங்கி எத்தனை யுத்தங்கள் அங்கே நடந்திருக்கின்றன! எந்த ஒரு யுத்தத்திலும் ஏன் பாலஸ்தீனியர்களால் வெற்றி பெற முடியவில்லை? சகோதர தேசங்கள் எல்லாம் அப்போது என்ன செய்துகொண்டிருந்தன?

அரபு தேசங்களின் கூட்டமைப்பு இருக்கிறது. அடிக்கடி கூடி மாநாடு நடத்தி இதுநாள் வரை என்ன சாதித்தார்கள் என்று ஏன் தமக்குத் தாமே அவர்கள் கேட்டுக்கொள்ளவில்லை?

உண்மையில் பாலஸ்தீன் சுதந்திரத்தில் அவர்களுக்கு விருப்பமாவது இருக்கிறதா இல்லையா?

இதற்கான சரியான காரணம் பொருளாதாரம் சம்பந்தப்பட்டது. சொன்னால் வலிக்கும் என்றாலும் சொல்லாமல் இருக்க முடியாது.

மற்ற அனைத்து அரபுதேசங்களுடன் ஒப்பிடவே முடியாத அளவுக்கு பாலஸ்தீன் ஒரு ஏழை நாடு. அங்கே பெட்ரோல் கிடைப்பதில்லை. இதை ஏற்கெனவே பார்த்திருக்கிறோம்.

மேலும் ஆண்டுக்கணக்கில் போராட்டத்தில் வாழ்க்கையைக் கழித்த மக்கள். அடிப்படை வசதிகள் கூட கிடையாது. விவசாயம் செத்துவிட்டது. கல்வியறிவு சதவிகிதம் குறைவு. வேலை வாய்ப்புகள் குறைவு.

தொழில் தொடங்கி நடத்தும் சாத்தியங்கள் குறைவு. வெளிதேசத் தொழில் நிறுவனங்கள் பாலஸ்தீனில் முதலீடு செய்வதென்பதும் மிக மிகக் குறைவு.

வசதி வாய்ப்புகளற்ற, தினசரி யுத்தம் நடக்கிற ஒரு தேசம் அது.

சொந்த இனமே என்றாலும் ஆதரவு தெரிவித்துவிட்டுப் பின்னால் யார் அரவணைத்து வளர்ப்பது என்கிற பதுங்கல் மனப்பான்மை அனைத்து அரபு தேசங்களுக்கும் உண்டு.

இதனாலேயே பாலஸ்தீன் பிரச்னைக்கும் தமக்கும் தொடர்பில்லாதது போல அவர்கள் காலம் காலமாக நடந்துகொண்டு வருகிறார்கள்.

பிரச்னைக்குத் தீர்வு காண்பதில் உள்ள நான்காவது தடை, அகதிகள். 1948_ம் ஆண்டு தொடங்கி இன்று வரை பல லட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வாழ வழியில்லாமல் மத்தியக் கிழக்கு முழுவதும் அகதிகளாகச் சுற்றிக்கொண்டிருக்கிறார்கள்.

சுதந்திரம் என்று வருமானால் அத்தனை பேரும் பாலஸ்தீனை நோக்கித்தான் வந்து சேருவார்கள்.

இந்த ஐம்பதாண்டுகளாகப் பெருகியுள்ள மக்கள் தொகைக்குக் கிட்டத்தட்ட சம அளவில் அகதிகளின் எண்ணிக்கையும் இருக்கும். சுதந்திர பாலஸ்தீனின் எல்லைக்கு உட்பட்ட நிலப்பரப்பு கனம் தாங்காமல் தள்ளாடும்.

ஆகவே எல்லைகளில் ஊடுருவல் நடக்கும். அது சண்டைக்கு வழி வகுக்கும்.

பாலஸ்தீனியர்களின் எண்ணிக்கை அதிகரிப்பது இஸ்ரேலின் பாதுகாப்புக்குக் கேடு என்று இஸ்ரேல் ஆட்சியாளர்கள் கருதுகிறார்கள்.

இன ரீதியில் ஒன்றானவர்களைத் தேசிய அடையாள ரீதியிலும் ஒன்று சேர்ந்து ஒரே இடத்தில் வசிக்க அனுமதிப்பது தனது தலையில் தானே மண் அள்ளிப்போட்டுக்கொள்வதற்குச் சமம் என்று இஸ்ரேல் கருதுகிறது.

ஐந்தாவது தடை, விவரிக்கவே அவசியமில்லாத ஈகோ பிரச்னை. இது இஸ்ரேலிய ஆட்சியாளர்கள் மட்டத்தில் மட்டுமல்லாமல் யூத மக்களிடத்திலும் ஆழமாக வேரோடியிருப்பதுதான் வேதனையின் உச்சம்.

ஐம்பதாண்டு காலமாக பாலஸ்தீன் அரேபியர்களை அடக்கி ஆண்டுகொண்டிருந்த ஆணவம், அத்தனை சுலபத்தில் அவர்களை விட்டு இறங்க மறுக்கிறது.

யுத்தமும் இழப்புகளும் பழக்கமாகிவிட்டபடியால் ஒருவரை ஒருவர் அழித்துக்கொள்ளும் மனோபாவம் மட்டுமே மேலோங்கியிருக்கிறது.

சரித்திரம் தங்களுக்குத் துரோகம் இழைத்ததை இன்று வரை மறக்காத யூதர்கள், சகோதர அரேபியர்களுக்குத் தாங்கள் இழைப்பதும் துரோகம்தான் என்பதை எண்ணிப் பார்க்க மறுக்கிறார்கள்.

இந்தக் காரணங்களால்தான் ஆயிரம் முறை அமைதி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் பாலஸ்தீன் பிரச்னை இன்றுவரை தீராத ஒன்றாகவே இருந்து வருகிறது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 6 நவம்பர், 2005
*************************************************
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

No comments: