Tuesday, March 31, 2009

83.84 .அக்ஸா மசூதியை இடிக்க நடக்கும் சதிகள்.ஏரியல் ஷரோன் நடத்திய ஓரங்க நாடகம்.பகுதி 83-84.

83] அக்ஸா மசூதியை இடிக்க நடக்கும் சதிகள்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 83.

இயேசுவைச் சிலுவையில் அறைந்து, கொல்ல உத்தரவிட்ட ஏரோது மன்னனின் காலத்தில், அதாவது கி.மு. 63-ல் இரண்டாவது முறையாகப் புதுப்பித்துக் கட்டப்பட்ட சாலமன் ஆலயத்தின் எச்சங்களைத் தேடி, கி.பி. 1967-லிருந்து யூதர்கள் அல் அக்ஸா மசூதி வளாகத்தில், அகழ்வாராய்ச்சி செய்து வருவதைப் பார்த்தோம்.

கிட்டத்தட்ட இரண்டாயிரம் வருடகாலத்து மிச்சங்களை இன்றும் அவர்கள், தேடிக்கொண்டிருக்கிறார்கள். ஓர் உடைந்த சுவர்தான் அவர்களது ஆதாரம்.

மேற்கொண்டு வலுவான ஆதாரங்கள் ஏதும் கிடைக்காத காரணத்தால், அல் அக்ஸா பள்ளிவாசலின் தாழ்வாரம், இஸ்லாமியர்களின் கட்டடக் கலையைப் பிரதிபலிப்பதாக இல்லை; உள்ளே இருக்கும் தூண்களும் மாடங்களும், பண்டைய ரோமானிய கட்டடக் கலைப் பாணியில் இருக்கின்றன என்றெல்லாம் சொன்னார்கள்.

அகழ்வாராய்ச்சியில் பல்வேறு ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டிருப்பதாகவும், அவ்வப்போது தகவல் வந்துகொண்டே இருக்கும். ஆனால், அந்த இடத்தில் தான் சாலமன் தேவாலயம் இருந்திருக்கமுடியும் என்பதற்கான உறுதியான ஓர் ஆதாரம், இன்றுவரை பெறப்படவில்லை என்பதே உண்மை.

ஆனால் இந்தக் காரணங்களால் அல் அக்ஸா மசூதியை இடித்துவிட்டு, அங்கே ஒரு யூத தேவாலயம் எழுப்பவேண்டுமென்கிற தங்கள் விருப்பத்தை விட்டுக்கொடுக்க, யூதர்கள் தயாராக இல்லை.

ஜெருசலேமே யூதர்களின் கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு நகரம்தான் என்பதால், அவ்வப்போது ஆக்கிரமிப்பு முயற்சிகள் மூலமும், இதற்கான வேலைகளை முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.

1967 _ யுத்தத்தில் இஸ்ரேல் வென்ற உடனேயே, மசூதி வளாகத்தில் அகழ்வாராய்ச்சிக்கான நடவடிக்கைகள் ஆரம்பமாயின என்று, சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம்.

அதோடு இன்னொரு காரியத்தையும் அவர்கள் செய்தார்கள். அந்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி, ஷலோமாகரன் என்கிற யூத மத குரு ஒருவர், ஒரு சிறு படையைத் (அரசாங்கப்படைதான்) தன்னுடைய பாதுகாப்புக்காக ஏற்பாடு செய்துகொண்டு, அல் அக்ஸா மசூதி வளாகத்துக்கு வந்து, அங்கே யூத முறைப்படியான பிரார்த்தனை மற்றும் பூஜைகளில் ஈடுபடத் தொடங்கினார்.

ஷலோமாகரன், தனது சொந்த முடிவின்பேரில்தான் இந்தப் பிரார்த்தனையைச் செய்தார் என்று இஸ்ரேல் தரப்பில் சொல்லப்பட்டாலும், அது, அரசு அனுமதியின்றி நடந்திருக்கச் சாத்தியமில்லை என்பது மிகவும் வெளிப்படை.

முஸ்லிம்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை.

அப்போதுதான் அவர்கள் யுத்தத்தில் தோற்றுத் துவண்டிருந்தார்கள். ஜெருசலேம் நகரை விட்டு அவர்கள் முற்றிலுமாக நீங்குவதற்குள், மசூதி அவர்கள் கையைவிட்டுப் போய் விடும் போலிருந்தது.

தாக்குதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த போராளி இயக்கத்தவர்கள் யாரும், அப்போது அங்கே இல்லை. ஒரு முழுநாள் நடைபெற்ற இந்தப் பிரார்த்தனையின் தொடர்ச்சியாக, மசூதி விரைவில் இடிக்கப்பட்டு, அங்கே பழைய சாலமன் ஆலயம் மீண்டும் எழுப்பப்படும் என்கிற நம்பிக்கையை யூதர்களுக்கு விதைத்துவிட்டு, வீடுபோய்ச் சேர்ந்தார், அந்த மதகுரு. (அவரது அந்த துணிச்சல் மிக்க நடவடிக்கைக்காக, அந்த வருடம் முழுவதும் இஸ்ரேலின் பல்வேறு நகரங்களில், அவருக்குப் பாராட்டுக்கூட்டங்கள் நடந்தனவாம்.)

ஒரு பக்கம் அகழ்வாராய்ச்சிப் பணிகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்க, அதில் நம்பிக்கை இல்லாத சில தீவிர யூதர்கள் மசூதியை வெடிகுண்டு வைத்துத் தகர்ப்பது, தீவைத்து எரிப்பது, புல்டோசர்களைக் கொண்டுவந்து இடிப்பது என்று, பல்வேறு உத்திகளைப் பரிசீலிக்கத் தொடங்கினார்கள்.

மசூதி வளாகத்தில், எந்தவிதமான அத்துமீறல்களையும் அனுமதிக்க முடியாது என்று இஸ்ரேல் அரசு சொன்னாலும், 1969-ம் ஆண்டு ஒரு தீவைப்புச் சம்பவம் அங்கே நடக்கத்தான் செய்தது. மனநிலை சரியில்லாதவன் என்று, பின்னால் இஸ்ரேல் நீதிமன்றம் சான்றிதழ் அளித்துவிட்ட அஸுயி டெனிஸ் என்கிற ஒரு யூதத் தீவிரவாதி, பள்ளிவாசலின் ஒரு பகுதியில் பெட்ரோல் ஊற்றித் தீவைத்தான்.

கணிசமான சேதம். அந்தப் பகுதியில் இருந்த சில முஸ்லிம் இளைஞர்கள் கடுமையாகப் போராடி, இந்தத் தீயை அணைத்தார்கள். இறுதிவரை தீயணைப்பு வண்டிகள் எதுவும் வரவேயில்லை.

அரசுத் தரப்பிலிருந்து எந்தவிதமான உத்தரவாதமும் இல்லாத நிலையில், முஸ்லிம்கள் தாங்களாகவே ஒரு குழுவை ஏற்பாடு செய்து, அல் அக்ஸா மசூதியைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழவைத்து, மசூதியைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்தார்கள்.

இதில் வினோதம் என்னவென்றால், முற்றிலும் இஸ்ரேல் அரசின் கட்டுப்பாட்டில் இருந்த மசூதிக்கு, அப்போது முஸ்லிம்கள் யாரும் போய்வரமுடியாது.

கேட்டால், அகழ்வாராய்ச்சிப் பணிகளைக் காரணம் சொல்லிவிடுவார்கள்.

அகழ்வாராய்ச்சிக்காரர்கள் எப்போது தோண்ட ஆரம்பித்து, எப்போது வீட்டுக்குப் போனாலும், உடனே யாராவது மசூதியைத் தகர்க்க வந்துவிடுவார்கள்.

மசூதிக்கு வெளியே கண்விழித்துக் காவல் காத்து நிற்கவேண்டியது மட்டும், முஸ்லிம்கள்.

யூத மதகுரு ஷலோமாகரன், முதல் முதலில் அல் அக்ஸாவுக்குச் சென்று, யூத மதச் சடங்குகளை நிறைவேற்றிவிட்டு வந்ததன் தொடர்ச்சியாக, அடுத்த நான்கைந்து வருடங்களில் மொத்தம் மூன்று முறை, இதே போன்ற முயற்சிகளும் அங்கே மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

ஒவ்வொரு முறையும் முஸ்லிம் இளைஞர்கள், அவர்களை வழிமறித்துத் தடுத்து நிறுத்தித் திருப்பி அனுப்ப வேண்டியிருந்தது.

இதனால், யூதர்கள் இந்தப் பிரச்னையை நீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்றார்கள். நீண்டநாள் இழுத்தடித்த இந்த வழக்கில், 1976-ம் வருடம் ஒரு தீர்ப்பு வழங்கப்பட்டது.

'இப்போது மசூதி இருக்கிறதென்றாலும் எப்போதோ தேவாலயம் இருந்த இடம்தான் அது என்று யூதர்கள் நம்புவதால், அவர்களும் அங்கே பிரார்த்தனையில் ஈடுபடத் தடையில்லை' என்பது தீர்ப்பு.

கவனிக்கவும். அகழ்வாராய்ச்சித் துறையினர் தமது முடிவுகளை முழுமையாக வெளிப்படுத்தவில்லை. அங்கே இரண்டாயிரம் வருடங்களுக்கு முந்தைய யூத தேவாலயம் இருந்தது நிரூபிக்கப்பட்டிருக்கவில்லை.

பிரச்னைக்குரிய இடத்தில் இரு சமயத்தவரும் பிரார்த்தனை செய்யலாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதன் உள்நோக்கம், மிக வெளிப்படையானது.

யூதர்கள் ஒரு மாபெரும் கலவரத்தை உத்தேசிக்கிறார்கள் என்று அலறினார்கள், அரேபியர்கள்.

காது கொடுத்துக் கேட்க யாருமில்லாத காரணத்தால், அல் அக்ஸா மசூதி வளாகத்துக்கு அடிக்கடி யூதர்கள் வரத் தொடங்கினார்கள்.

இதனால் எந்தக் கணமும் அங்கே மதக்கலவரங்கள் மூளும் அபாயம் ஏற்பட்டது.

சமயத்தில், வம்புக்காகவே நூற்றுக்கணக்கான யூதர்கள் (பெரும்பாலும் இந்த அணிகளில் காவல்துறையினரே இருந்ததாக முஸ்லிம்களின் சில இணையத்தளங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை.)

மொத்தமாக மசூதிக்குள் நுழைந்து, யூத மதச் சடங்குகளைச் செய்ய ஆரம்பிப்பார்கள். நாள்கணக்கில்கூட இந்தச் சடங்குகள் நீள்வதுண்டு. அப்போதெல்லாம், அகழ்வாராய்ச்சித் துறையினர் விடுப்பு எடுத்துக்கொண்டு போய்விடுவார்கள்.

இம்மாதிரியான தருணங்களில், அந்தப் பகுதியில் கலவரம் மூள்வது சாதாரணமாகிப்போனது.

முஸ்லிம்கள், யூதர்களைத் தாக்குவார்கள். பதிலுக்கு யூதர்கள் முஸ்லிம்களைத் தாக்குவார்கள்.

கடைகள் உடனடியாக மூடப்படும். கற்கள் பறக்கும். பாட்டில்களில் அடைத்த பெட்ரோல், வானில் பறந்து சுவரில் மோதி வெடிக்கும். எப்படியும் ஓரிருவர் உயிரை விடுவார்கள். பலர் காயமடைவார்கள். கிட்டத்தட்ட, இது ஒரு தினசரி நடவடிக்கையாகிப் போனது.

புனிதமான நகரம் என்று வருணிக்கப்படும் ஜெருசலேம், உலகின் ஆபத்து மிகுந்த நகரங்களில் ஒன்றாக ஆகிப்போனது.

இதில் உச்சகட்ட சம்பவம் ஒன்று உண்டு. அல் அக்ஸா மசூதி வளாகத்தின் அருகே, ஒரு பள்ளிக்கூடம் உண்டு. யூதர்களின் மதப் பள்ளிக்கூடம் அது. திடீரென்று அந்தப் பள்ளிக்கூடத்தை வெடிமருந்துக் கிடங்காக மாற்றி விட்டார்கள்.

ஒரே இரவில் லாரிகளில் வெடிபொருள்களைக் கொண்டுவந்து, அங்கே நிரப்பினார்கள். ஒரு சிறு வெடிவிபத்தை 'உண்டாக்கினால்' கூடப் போதும். மசூதி இருந்த இடம், அடையாளம் தெரியாமல் உருக்குலைந்துவிடும் அபாயம் ஏற்பட்டது.

இதனால் கலவரமடைந்த முஸ்லிம்கள், உடனடியாக அந்தப் பள்ளிக்கூடத்தில் இருக்கும் வெடிபொருள்களை அப்புறப்படுத்தக் கோரி, போராட்டத்தில் இறங்கினார்கள்.

இந்தப் போராட்டத்தை, ஒரு கலவரமாகக் கணக்கில் எடுத்துக்கொண்ட இஸ்ரேல் காவல்துறை, கலவரத்தை அடக்குவதான பெயரில், மசூதியின் மீது தொடர்ந்து துப்பாக்கிச் சூடு நிகழ்த்த ஆரம்பித்தது.

இதில் மசூதியில் பல பகுதிகள் சேதமாயின. ஒரு சில உயிர்களைப் பலி வாங்கி, சில கதவு ஜன்னல்களை நாசப்படுத்தி, சுமார் எட்டு மீட்டர் பரப்பளவுக்கு மசூதிச் சுவரையும் இடித்துத் தள்ளியதுடன், இந்தக் கலவர அடக்கல் நடவடிக்கை, ஒரு முடிவுக்கு வந்தது.

பள்ளிக்கூட வெடிகுண்டுகள் அப்புறப்படுத்தப்படும் என்று உறுதியளித்துவிட்டு ஒதுங்கிப்போனார்கள். (பிறகு அந்த குண்டுகள் எப்போது அப்புறப் படுத்தப்பட்டன என்பது தெரியவில்லை. ஆனால் இரண்டு சந்தர்ப்பங்களில் பள்ளிக்கூடம் இருந்த திசையிலிருந்து, மசூதியை நோக்கி வெடிகுண்டுகள் வீசப்பட்டிருக்கின்றன. ஆனால் சேதமில்லை.)


1982-ம் ஆண்டுக்குப் பிறகு, இந்தப் பள்ளிவாசல் தகர்ப்பு முயற்சிகள், புதுப்பரிமாணம் பெற்றன. குறைந்தது வாரம் ஒருமுறையாவது, அந்தப் பகுதியில் குண்டுவீச்சு சம்பவம் நடைபெற ஆரம்பித்தது.

வாகனங்களில் வந்து இறங்கி மசூதியை நோக்கி குண்டு வீசுவது தவிர, இரவு நேரங்களில் ரகசியமாக, அத்துமீறி உள்ளே புகுந்து, வெடிகுண்டுகளை வைத்துவிட்டுப் போவதும் நடந்திருக்கிறது. ஷிப்ட் முறையில் முஸ்லிம்கள் விழித்திருந்து, இந்தச் சம்பவங்கள் அசம்பாவிதங்களாகி விடாமல் தடுப்பதற்காகக் காவலில் ஈடுபட்டார்கள்.

அப்படிக் காவலில் ஈடுபட்டவர்கள் மீதும் தாக்குதல்கள் நடந்தன. 1982-ம் ஆண்டு தொடங்கி 86 வரையிலான காலகட்டத்தில், அல் அக்ஸா காவல் பணியில் ஈடுபட்டிருந்த முஸ்லிம் இளைஞர்களில் மொத்தம் 23 பேர், யூதர்களின் தாக்குதலுக்கு பலியாகியிருக்கிறார்கள். (முஸ்லிம்கள் திருப்பித்தாக்கியதில், இதே சந்தர்ப்பங்களில், இதே காலகட்டத்தில் 16 யூதர்களும் பலியாகியிருக்கிறார்கள்.)

இதில், கலவரத்தை அடக்குவதாகச் சொல்லிக்கொண்டு, ராணுவம் உள்ளே புகுந்ததன் விளைவாக இறந்தவர்கள் தனி. உண்மையில் கலவரக்காரர்களைக் காட்டிலும், ராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையினால்தான் மசூதி அதிகமாகப் பாதிக்கப்பட்டது. அதன் பல பகுதிகள் இடிந்து சின்னாபின்னமாயின.

82-ம் வருடம் பிப்ரவரி மாதம் லெஸர் என்கிற யூதர் ஒருவர், தனது உடம்பெங்கும் ஜெலட்டின் குச்சிகளைக் கட்டிக்கொண்டு, மனித வெடிகுண்டாக, பகிரங்கமாக அல் அக்ஸாவுக்குள் நுழைந்தார்.

முஸ்லிம்கள் கடுமையாகப் போராடி, அவரை அப்புறப்படுத்தினார்கள். இந்தச் சம்பவம் உண்டாக்கிய பாதிப்பில், அடுத்த வருடமே தீவிர யூதர்கள் அடங்கிய குழுவினர் (சுமார் ஐம்பது பேர் கொண்ட குழு), இதேபோல் மனித வெடிகுண்டுகளாக ஒரு நாள் அதிகாலை மசூதிக்குள் நுழைந்தார்கள்.

அதிகாலைப் பிரார்த்தனைக்காக அந்தப் பக்கம் வந்த சில முஸ்லிம்கள், அவர்களைப் பார்த்துவிட்டுச் சென்று தடுக்க, அப்போது எழுந்த களேபரத்தில் அத்தனை பேருமே மடிந்துபோனார்கள்.

நல்லவேளையாக, மசூதி தப்பித்தது.

1984-ம் ஆண்டு ஒரு யூத மதகுரு, மசூதி வளாகத்தில் அத்துமீறி நுழைந்து, மசூதியின் மேலே ஏறி, அங்கே யூத தேசியக் கொடியைப் பறக்கவிட்டார்.

இந்தச் சம்பவம் மிகப்பெரிய கலவரத்துக்கான தூண்டுதலாக அமைந்தது. அந்த யூத மதகுரு, மனநிலை சரியில்லாதவர் என்று இஸ்ரேலிய நீதிமன்றம் சொல்லிவிட்டதைக் கண்டித்து, உலகெங்கும் உள்ள முஸ்லிம்கள் கோபக்குரல் எழுப்பினார்கள்.

ஜெருசலேம் முழுவதும் வசித்துவந்த முஸ்லிம்கள் கலவரத்தில் இறங்க, போலீஸ் தடியடி, துப்பாக்கிச் சூடு என்று நகரமே ரணகளமானது. இருபது பேர் இறந்தார்கள். அறுபத்தியேழு பேர் படுகாயமடைந்தார்கள்.

1990-ம் ஆண்டு சாலமன் ஆலயத்தை, மசூதி வளாகத்தில் எழுப்பியே தீருவோம் என்று, அடிக்கல் நாட்டும் சம்பவம் ஒன்று நடைபெற்றது. தடுக்கப்போன சுமார் இருநூற்றைம்பது முஸ்லிம்கள், வளாகத்திலேயே படுகொலை செய்யப்பட்டார்கள்.

இந்தக் கலவரங்களின் உச்சமாக, 2000-ம் ஆண்டு செப்டெம்பரில் சில முக்கிய சம்பவங்கள் நடைபெற்றன.

27-ம் தேதி டேவிட் பிரி (David Biri) என்கிற யூத மதகுருவைச் சில முஸ்லிம்கள் சேர்ந்து கொன்றார்கள். இது, இன்னொரு இண்டிஃபதாவின் ஆரம்பம் என்று இஸ்ரேல் உளவுத்துறை முடிவு செய்துவிட்டது.

இந்தச் சம்பவம் நடந்த இருபத்துநான்கு மணி நேரத்துக்குள், இன்னொரு அதிர்ச்சிகரமான சம்பவம், மேற்குக்கரை நகரமான கல்கில்யாவில் நடைபெற்றது.

இஸ்ரேலிய காவல்துறையினருடன் இணைந்து, ஊர்க்காவல் பணியில் ஈடுபட்டிருந்த பாலஸ்தீனியக் காவலர் ஒருவர், தமது சக யூதக் காவலர் ஒருவரைத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார்.

எப்படியும் கலவரம் மூளத்தான் போகிறது என்று எதிர்பார்த்த, அப்போதைய இஸ்ரேலிய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, ஏரியல் ஷரோன், அரசியல் காரணங்களை உத்தேசித்து, அல் அக்ஸா மசூதிக்கு ஒரு விசிட் செய்தார்.

இது மிகப்பெரிய பிரச்னைக்கு வித்திட்டுவிட்டது.

தீவிர யூதரான ஏரியல் ஷரோன், அல் அக்ஸா மசூதிக்குள் நுழைவதை ஜெருசலேம் நகரத்து முஸ்லிம்கள் விரும்பவில்லை.

ஏற்கெனவே பிரச்னைகள் மலிந்த பிராந்தியம் அது. ஏரியல் ஷரோன் அங்கே வரும்பட்சத்தில் நிச்சயம் விபரீதம் நடக்கும் என்று நினைத்தவர்கள், அவருக்கு எதிர்ப்புத் தெரிவித்து, உள்ளே விடமாட்டோம் என்று வழிமறித்து நின்றார்கள்.

ஏரியல் ஷரோன் மசூதிக்குள் நுழைவதற்கு, இஸ்ரேலிய காவல்துறை பாதுகாப்பு அளித்தது. ஷரோன் மசூதிக்குள் நுழைந்தார். வெளியே கலவரம் வெடித்தது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 15 செப்டம்பர், 2005.

84] ஏரியல் ஷரோன் நடத்திய ஓரங்க நாடகம்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 84

ராணுவத் தளபதியாக உத்தியோகம் பார்த்திருந்தாலும் அடிப்படையில் ஏரியல் ஷரோன், எப்போதுமே அரசியல்வாதிதான். பிரதமராவதற்கு முன்பு, அவரது அரசியல் எப்படி இருந்தது என்பதை, ஒரு வரியில் விளக்கிவிடலாம்.

அவர் இஸ்ரேலின் லாலு பிரசாத் யாதவ். அதிரடிகளுக்குப் பெயர்போனவர். ஜனநாயக சௌகரியத்தில் நினைத்துக்கொண்டால் பேரணி, ஊர்வலம் என்று அமர்க்களப்படுத்திவிடுவது, அவரது இயல்பாக இருந்தது.

பெரிய அளவில் - மிகப்பெரிய அளவில் ஓர் அரசியல் பரபரப்பை ஏற்படுத்துவதற்காக, அவர் தீட்டிய திட்டம்தான், அல் அக்ஸா மசூதிக்குள் நுழைவது என்பது.

அதன்மூலம் யூதர்களின் நன்மதிப்பை அழுத்தந்திருத்தமாகப் பெறுவது, அதை அடிப்படையாக வைத்தே இஸ்ரேலின் பிரதமராகிவிடுவது என்கிற அவரது கனவு, அச்சுப்பிசகாமல் பலித்ததை நினைவில் கொள்ளவேண்டும்.

ஆனால், அன்றைக்கு அந்தச் சம்பவம் உண்டாக்கிய பாதிப்பு, பாலஸ்தீன் சரித்திரத்தில் அழிக்கமுடியாததொரு மாபெரும் கறையாகிப்போனதும் உண்மை.

ஏரியல் ஷரோன், அல் அக்ஸாவுக்கு வருகை தரத் திட்டமிட்டிருந்த தினத்தில், ஒட்டுமொத்த ஜெருசலேம் மக்களும் அந்தப் பிராந்தியத்தில் நிறைந்து குவிந்துவிட்டார்கள்.

ஏற்கெனவே, அரசுக்கு விண்ணப்பித்து, 'முறைப்படி' அனுமதி பெற்றுத்தான் அவர் அந்தத் 'தீர்த்தயாத்திரை'யை மேற்கொண்டிருந்தார். ஆகவே, முன்னதாகவே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மூன்று அரண்கள் போல் நகரக் காவல் படையினர், துணை ராணுவப் படையினர், மொஸாட் உளவுப் பிரிவின் சிறப்புக் காவல் அதிகாரிகள் மசூதியைச் சூழ்ந்து காவல் காக்க, ஏரியல் ஷரோன் அங்கே வந்து சேர்ந்தார்.

இறங்கியவருக்கு, முதலில் கிடைத்தது ஒரு கல்லடி. எங்கிருந்து எப்படிப் பறந்து வந்தது என்று ஆராய்ச்சி செய்யவெல்லாம் நேரமில்லை. ஒரு கல். ஒரே ஒரு கல். அவ்வளவுதான். சரியாக அவரது காலடியில் வந்து விழுந்தது.

நகத்தில் பட்டிருக்குமோ என்னவோ. ஆனால், தாக்குதல் ஆரம்பமாகி விட்டதாக, காவல்துறையினர் தற்காப்பு யுத்தத்துக்கு ஆயத்தமாக, அதுவே போதுமானதாக இருந்தது.

நிறையப்பேர் கறுப்புக்கொடி காட்டினார்கள். ஷரோனுக்கு எதிராக கோஷமிட்டார்கள். தடுப்புகளை மீறி வந்து, அவரைத் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்கள்.

ஆனால், காவல்துறையினர் யாரையும் அருகே நெருங்க விடவில்லை. இது, முஸ்லிம்களின் கோபத்தை மிகவும் கிளறிவிட்டது. வன்மத்தை நெஞ்சுக்குள் வைத்துப் பூட்டி, தொலைவில் நின்றபடியே பல்லைக் கடித்துக் கொண்டிருந்தார்கள்.

'நான் வம்பு செய்ய வரவில்லை; அன்பை விதைக்கவே வந்தேன்' என்று கவித்துவமாகப் பேசி கைதட்டல் பெற்றுக்கொண்டார் ஏரியல் ஷரோன்.

அவரது வருகையின் உண்மையான நோக்கம், அன்பு விதைப்பதெல்லாம் இல்லை. அல் அக்ஸா மசூதி வளாகம் யூதர்களுக்குச் சொந்தமானதுதான்; நாம் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் மசூதியை இடித்துவிட்டு, நமது தேவாலயத்தைக் கட்டிவிடலாம் என்று சொல்லாமல் சொல்லுவதுதான்!

ஜெருசலேம் முழுமையாக, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில்தான் இருக்கிறது என்பதை, யூதர்களுக்குப் புரியவைப்பதற்காகத்தான் அவர் அந்த முயற்சியை மேற்கொண்டார்.

ஏரியல் ஷரோன் என்கிற ஒரு மனிதர், சுமார் பதினைந்து நிமிடங்கள் நடத்திய, அந்த ஓரங்க நாடகத்துக்குப் பாதுகாவலர்களாக வந்திருந்தவர்களின் எண்ணிக்கை, மொத்தம் ஆயிரத்து இருநூறு.

பார்வையாளர்களான பொதுமக்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட எழுபத்தைந்தாயிரம் பேர்.

ஷரோன் வந்து திரும்பும்வரை அதாவது, அந்தப் பதினைந்து இருபது நிமிடங்கள் வரை, அங்கே எந்த விபரீதமும் நடக்கவில்லை என்பதுதான் உண்மை.

காவலர்கள் மிகத் திறமையாகச் செயல்பட்டு, ஒரு எறும்புகூடக் கிட்டே வரமுடியாதபடிதான் பார்த்துக்கொண்டார்கள்.

ஆனால், அவர் திரும்பிய மறுகணமே ஜெருசலேம் பற்றிக்கொள்ளத் தொடங்கிவிட்டது.

அடிபட்ட புலிகளாக ரகசியமாகக் கூடிப் பேசினார்கள், முஸ்லிம்கள்.

புனிதமான அல் அக்ஸா மசூதி வளாகத்தை வேண்டுமென்றே களங்கப்படுத்துவதற்காகவே, ஏரியல் ஷரோன் அங்கு வந்து போனார் என்பதில், அவர்களுக்கு இரண்டாவது கருத்தே இல்லை.

ஆதிக்க சக்திக்கும் பாதிக்கப்பட்ட வர்க்கத்தினருக்கும், காலம் காலமாக நடந்து வரும் யுத்தத்தின் அடுத்த பரிமாணம், அந்தக் கணத்தில் நிகழலாம் என்பது போலச் சூழல் மோசமடைந்துகொண்டிருந்தது.

முஸ்லிம்கள், எந்தத் தலையை முதலில் உருட்டப்போகிறார்கள் அல்லது எந்தக் கிராமத்தில் புகுந்து, தீவைக்கப்போகிறார்கள் என்பதுதான் கேள்வி.

பதில் எப்போது கிடைக்கும் என்று உலகமே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தபோதுதான், அது நடந்தது..

முதல் உயிரை யூதர்களே பறித்தார்கள்.

எப்படியும் முஸ்லிம்கள் தாக்கத்தான் போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பில், தாங்களே முந்திக்கொண்டால், சேதத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று நினைத்த ஜெருசலேம் நகர யூதர்கள், அங்கிருந்த முஸ்லிம் குடியிருப்புகளின்மீது, சற்றும் எதிர்பாராவிதமாகத் தாக்குதலைத் தொடங்கிவிட்டார்கள்.

கற்கள் பறந்தன. தீப்பந்தங்கள் பாய்ந்து சென்று பற்றிக்கொண்டன. கதவுகள் இடித்து உடைக்கப்பட்டு, வீடுகள் அனைத்தும் சூறையாடப்பட்டன. தப்பியோடியவர்களைப் பிடித்து இழுத்து, கழுத்தை அறுத்தார்கள். சிலர் கைத்துப்பாக்கியால் சுட்டார்கள்.

கண்ணிமைக்கும் நேரத்துக்குள் எல்லாம் நடந்தது. அரை நாள் பொழுதுதான். கலவர மேகம் சூழ்ந்தது தெரியும். முஸ்லிம்கள் தமது கலவரத்தை எங்கிருந்து தொடங்குவார்கள் என்று அனைவரும் யோசித்துக்கொண்டிருக்கும்போது, யூதர்கள் அதனை ஆரம்பித்துவைத்ததோடு மட்டுமல்லாமல், அன்று இரவுக்குள்ளாகவே நூற்றுக்கணக்கான முஸ்லிம்களை ரத்தம் சொட்டச்சொட்டத் தலைதெறிக்க ஓடவைத்தார்கள்.

அப்புறம் நடந்ததுதான், மேலே சொன்ன தீவைப்பு இத்தியாதிகள்.

இத்தனை நடந்தபோதும், காவலர்கள் யாரும் அங்கே வரவில்லை என்பதை கவனிக்க வேண்டும். எல்லாம் முடிந்து நகரமே மயானபூமியாகக் காட்சியளித்தபோதுதான், முதல் போலீஸ் வண்டி வந்து நின்றது.

பதினேழு நிமிடங்கள் பிரதான மார்க்கெட்டில் ஒப்புக்கு ஒரு விசாரணை நடந்தது.

கொதித்துவிட்டது முஸ்லிம் உலகம். அன்றிரவே தீர்மானித்து, மறுநாள் காலையே தமது எதிர்ப்பைப் பதிவுசெய்யும் விதமாகக் கண்டனப் பேரணிக்கு ஏற்பாடு செய்தார்கள். இங்கே மேற்குக் கரையில் ஒரு பேரணி. அங்கே காஸாவில் ஒரு பேரணி.

தோதாக அன்றையதினம், முஹம்மத் அல் துரா என்கிற பன்னிரண்டே வயதான சிறுவன் ஒருவனும் அவனது தந்தையும், இஸ்ரேல் ராணுவத்தினருக்கும் பாலஸ்தீன் போராளிகளுக்கும் இடையில் நடைபெற்ற ஒரு சிறு துப்பாக்கிச் சண்டையின் குறுக்கே போய் மாட்டிக்கொண்டுவிட, சிறுவன் பலியாகிப் போனான்.

இதுவும், முஸ்லிம்களின் ஆத்திரத்தை அதிகப்படுத்தியது. பாலஸ்தீனில் மட்டுமல்ல. உலகில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தினரையும், வெகுண்டெழச் செய்த சம்பவம் அது.

இதன் தொடர்ச்சியாகத்தான், சாதாரண கண்டனப் பேரணியாகத் தொடங்கிய அந்த 'அல் அக்ஸா இண்டிஃபதா', ஒரு மாபெரும் கலவர ரகளையின் தொடக்கப்புள்ளி ஆனது.

எங்கிருந்துதான் முஸ்லிம்களுக்குக் கற்கள் கிடைத்தனவோ தெரியவில்லை. பேரணியெங்கும் கற்களே பறந்தன. கண்ணில் பட்ட அத்தனை இஸ்ரேலியக் காவலர்களையும் அடித்தார்கள். துரத்தித் துரத்தி அடித்தார்கள்.

பாட்டில்களில் பெட்ரோல் நிரப்பிப் பற்றவைத்துத் தூக்கித் தூக்கி வீசினார்கள். யூதக் கடைகள், கல்வி நிலையங்கள், வீடுகள் எதையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை. போகிற வழியிலெல்லாம், முத்திரை பதித்துக்கொண்டே போனார்கள்.

இத்தனைக்கும், முஸ்லிம்கள் தரப்பில் இழப்புகள் அம்முறை மிக அதிகமாக இருந்தது.

இண்டிஃபதா தொடங்கிய முதல் ஆறு தினங்களிலேயே, சுமார் அறுபத்தைந்து பேரை இஸ்ரேலிய காவல்துறையினர் சுட்டுக்கொன்றிருந்தார்கள். இவர்கள் தவிர, சுமார் 2,700 பேர் நடக்கக்கூட முடியாத அளவுக்குக் கடுமையாகத் தாக்கப்பட்டனர்.

வீதியெங்கும் ரத்தக் கறையுடன் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் விழுந்துகிடந்த காட்சிகளை, சர்வதேச மீடியா கர்ம சிரத்தையுடன் ஒளிபரப்பியது.

அக்டோபர் 12-ம் தேதி இரண்டு இஸ்ரேலிய போலீஸார், சிவிலியன் உடையில் ரமல்லா நகருக்குள் புகுந்தார்கள். அவர்களை அடையாளம் கண்டுகொண்ட பாலஸ்தீன் அத்தாரிடி காவலர்கள், உடனடியாகக் கைது செய்து சிறையில் தள்ளினார்கள்.

இந்தச் சம்பவம், மேற்குக் கரையில் ஒப்புக்குக் காவலர்கள் என்கிற பெயருடன், பொழுதுபோக்கிக்கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர்கள் சிலருக்கு, மிகுந்த சலிப்பையும் வெறுப்பையும் உண்டாக்கின. அவர்கள், காவல் நிலையத்துக்குள் புகுந்து அங்கே பணியில் இருந்த இஸ்ரேலியக் காவலர்கள் அத்தனை பேரையும் சுட்டுக்கொன்று, பிணங்களைத் தாங்களே தூக்கி வந்து வீதியில் வீசி எறிந்தார்கள்.

தற்செயலாக, அந்தப் பக்கம் படமெடுத்துக்கொண்டிருந்த ஒரு இத்தாலி டி.வி. குழுவினர், இந்தக் காட்சியைப் படமெடுத்து ஒளிபரப்பிவிட, ஒட்டுமொத்த யூதகுலத்தவரும், பாலஸ்தீன் அரேபியர்களை ஒழித்துக்கட்ட, வரிந்துகட்டிக்கொண்டு, களத்தில் குதித்தனர்.

நிலைமை கட்டுக்கடங்காமல் போய்விடும் அபாயம் தெரியவரவே, இஸ்ரேல் அரசு, பாலஸ்தீன் அத்தாரிடி ஆட்சி புரியும் மேற்குக் கரை மற்றும் காஸா பகுதிகளில், விமானத் தாக்குதல் நடத்த முடிவு செய்தது.

இந்தக் களேபரங்கள் நடந்துகொண்டிருந்த காலத்தில், இஸ்ரேலில் பொதுத்தேர்தல் வந்தது. வருடம் 2001, பிப்ரவரி மாதம்.

தொழிலாளர் கட்சித் தலைவர் ஈஹுத் பாரக், புகழ்பெற்ற மக்கள் தலைவர். எப்படியும் அவர் தலைமையிலான ஆட்சிதான் அமையும் என்று உலகம் எதிர்பார்த்துக்கொண்டிருக்க, சற்றும் நம்பமுடியாதபடி லிகுத் கட்சியின் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஏரியல் ஷரோன் அமோகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று பிரதமர் ஆனார்.

எல்லாம், அவர் அல் அக்ஸா மசூதிக்குள் புகுந்து நடத்திய அரசியல் நாடகத்தின் விளைவு. யூதர்களின் தேவதூதரே அவர்தான் என்பது போல், திட்டமிட்டு பிரசாரம் செய்யப்பட்டது அப்போது.

யூதர்கள் இழந்த தம் சாலமன் தேவாலயத்தை மீண்டும் கட்டவேண்டுமென்றால், ஜெருசலேத்தை அவர்கள் நிரந்தரமாகத் தங்கள் உடைமை ஆக்கிக்கொள்ள வேண்டுமென்றால், ஏரியல் ஷரோனை ஆட்சியில் அமர்த்தினால் மட்டுமே முடியும் என்று பிரசாரம் செய்யப்பட்டிருந்தது.

ஷரோனும் மிகத் தெளிவாகச் சொல்லியிருந்தார். 'எனக்கு யார் மீதும் அனுதாபங்கள் ஏதுமில்லை. இஸ்ரேல் மக்களுக்காக மட்டுமே நான் குரல் கொடுப்பேன், போராடுவேன்.''போதாது? பிரதமராகிவிட்டார்.

மே மாதம் 7-ம் தேதி ஒரு சம்பவம் நடந்தது. நடந்துகொண்டிருந்த சம்பவங்களுக்கெல்லாம், சிகரமானதொரு சம்பவம்.

பாலஸ்தீன் அத்தாரிடி பொறுப்பில் இருந்த காஸா பகுதியின் கடல் எல்லைக்குள் 'சந்தோரினி' என்றொரு கப்பல் வந்துகொண்டிருந்தது. அந்தக் கப்பலை இஸ்ரேலியக் கடற்படை அதிகாரிகள், சுற்றி வளைத்துச் சோதனை போட்டார்கள்.

ஏராளமான ஆயுதங்களும் வெடிமருந்துகளும் அதிலிருந்து கண்டெடுக்கப்பட்டன. அவை அனைத்தும், 'Popular Front for the Liberation of Palestine - General Command (PFLP - GC)' என்கிற அமைப்பின் தலைவரான அஹமத் ஜிப்ரில் என்பவரின் ஆர்டரின் பேரில், காஸா துறைமுகத்துக்கு வந்துகொண்டிருந்த ஆயுதங்கள்.

அவற்றின் மொத்த மதிப்பு பத்து மில்லியன் அமெரிக்க டாலர்கள் என்று, மதிப்பிட்ட அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

காஸா துறைமுகத்துக்குச் சற்றுத்தள்ளி ஒதுக்குப்புறமான கடல் பகுதியில் கப்பலை நிறுத்தி, படகுகள் மூலம் அவற்றை எடுத்துச் சென்று பாலஸ்தீன் அத்தாரிடி அதிகாரிகளிடம் சேர்ப்பிக்க, உத்தரவு இருந்ததாகப் புலனாய்வு அதிகாரிகள் தெரிவித்தார்கள்.

மிகவும் வெளிப்படையாகச் சொல்லுவதென்றால், யாசர் அராஃபத், இஸ்ரேலுக்கு எதிரானதொரு முழுநீள யுத்தத்துக்கு ஆயத்தம் செய்துகொண்டிருக்கிறார் என்பதே இதன் பொருள்.

இதை பாலஸ்தீனியர்களேகூட நம்பமாட்டார்கள்.

அராஃபத், என்றைக்கு பாலஸ்தீன் அத்தாரிடியின் தலைவராகி, மேற்குக் கரை நகரங்களையும் காஸாவையும் ஆளத் தொடங்கினாரோ, அன்றிலிருந்தே தமது போராளி முகத்தைக் கழற்றி வைத்துவிட்டார் என்பதுதான், பாலஸ்தீனியர்களின் பிரதானமான குற்றச்சாட்டு.

ஆனால், இந்த விஷயத்தில் இஸ்ரேலிய கடற்படை அதிகாரிகள் சொன்ன தகவல், முற்றிலும் வேறு மாதிரியாக அல்லவா இருக்கிறது?

இஸ்ரேல் வேறு ஏதாவது சதித்திட்டம் தீட்டுகிறதா என்ன? யாருக்கும் அப்போது புரியவில்லை.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 18 செப்டம்பர், 2005
**********************************
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)
****************************************************

2 comments:

Suresh said...

அருமையா இருந்தது :-) வோட்டும் போட்டாச்சு தமில்ஷ்ளையும் தமிழ்மனதுளையும்

டைம் இருந்த என்னோட பதிவு படித்து
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_1681.html

புது மண தம்பதியர்களுக்கு மட்டும்

http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_6275.html

அப்படியே இந்த பதிவை படித்து பிடித்தல் வோட்ட போடுங்க

http://www.tamilish.com/tamvote.php?url=http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html

VANJOOR said...

DEAR SURESH,
THANK YOU. AS PER YOUR REQUEST I HAVE VOTED FOR YOU IN 2 TAMILMANAM AND ONE ONE TAMILISH.

PLEASE CONTINE TO READ MY POSTS.

REGARDS.
VANJOOR.