Friday, April 17, 2009

99.100. பாலஸ்தீன் சுதந்திரம் சாத்தியமானதே. The End] நிலமெல்லாம் ரத்தம் - நிறைவுரை பகுதி 99.100.

99] பாலஸ்தீன் சுதந்திரம் சாத்தியமானதே.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 99.

எல்லா பாலைவனங்களிலும் எப்போதாவது ஒருநாள் மழை பொழியத்தான் செய்யும் என்று ஒரு பழமொழி இருக்கிறது.

பாலஸ்தீன் சுதந்திரம் என்பதும் சாத்தியமானதே.

அறிவியல், தொழில்நுட்பம் போன்ற துறைகளில் இஸ்ரேல் இன்று பெற்றிருக்கும் அபரிமிதமான வளர்ச்சி, உலக நாடுகள் மத்தியில் இஸ்ரேலியத் தொழில் நுட்பங்களுக்கு இருக்கும் மதிப்பு, மரியாதை ஆகியவற்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, இந்த இனச் சண்டையை இன்னும் தொடர்வது அத்தேசத்தின் மிகப்பெரிய அவமானமே.

பாலஸ்தீன் போராளி இயக்கங்களுடன் போரிடுவதற்காக இஸ்ரேல் செலவிடும் தொகை எத்தனை என்று தெரிந்தால் அதிர்ச்சியடைவீர்கள்.

ஆண்டு வரவு செலவுக் கணக்கில் சராசரியாக நான்கில் ஒரு பங்கை அவர்கள் இதற்குச் செலவிட்டுக்கொண்டிருக்கிறார்கள். சிறியதும் பெரியதுமாக எத்தனை யுத்தங்கள், எவ்வளவு இழப்புகள்?

பாலஸ்தீனின் சுதந்திரத்தை உறுதிப்படுத்தி விட்டு, மேற்குக் கரைப் பகுதிகளையும் காஸாவையும் முற்றிலுமாக அவர்கள் வசம் அளித்து விட்டு இஸ்ரேல் விடைபெற்றுக்கொண்டு,விட்டால், அத்தேசத்தின் வளர்ச்சி சதவிகிதம் இன்னும் அதிகமாகும் என்பதில் சந்தேகமே இல்லை.

இதைச் செய்ய அவர்களைத் தடுப்பவை என்னென்ன என்பதைத்தான் முந்தைய அத்தியாயத்தில் பார்த்தோம்.

ஆனால், இதனைச் செய்துதான் ஆகவேண்டும் என்கிற சூழ்நிலை இன்னும் ஐந்திலிருந்து ஏழு ஆண்டுகளுக்குள் வந்தே தீரும் என்றொரு கணிப்பு இருக்கிறது.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை யூதர்களுக்கு இருந்த இருப்பியல் சார்ந்த பிரச்னைகளும் பதற்றங்களும் இப்போது அறவே இல்லை. உலகம் ஒரு பெரிய கிராமமாகிவிட்ட சூழ்நிலையில் அவர்களால் எங்கு போயும் தமது இருப்பை ஸ்தாபித்துக்கொள்ள முடியும்.

மத, இன அடையாளங்கள் பின்தள்ளப்பட்டு, திறமை இருப்பவன் பிழைத்துக்கொள்வான் என்கிற பொதுவான சாத்தியத்தில் உலகம் இயங்கத் தொடங்கிவிட்டது. இந்நிலையில், இனச் சண்டைகளில் வாழ்க்கையை வீணாக்கிக்கொண்டிருக்க, யூதர்கள் விரும்பமாட்டார்கள்.

ஆனால், இந்த மனமாற்றம் ஓரிரவில் வரக்கூடியதல்ல.

கொஞ்சம் கொஞ்சமாக வரும். வந்தே தீரும். அதுவரை அமைதி காக்கவேண்டிய அவசியம் பாலஸ்தீனியர்களுக்கும் இருக்கிறது.

தொடர் யுத்தங்களால் இதுவரை தாங்கள் சாதித்ததென்ன என்று அவர்களும் யோசித்துப் பார்த்தாக வேண்டியிருக்கிறது. அமைதிப் பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்ளலாம் என்று அராஃபத் முடிவு செய்த பிறகுதான், ஓரிரு நகரங்களாவது அரேபியர்கள் ஆள்வதற்குக் கிடைத்தன.

அதே அமைதிப் பேச்சுகளை மம்மூத் அப்பாஸ் முன்னெடுத்துச் சென்றதன் விளைவாகத்தான் இன்றைக்கு மேற்குக்கரை மற்றும் காஸா பகுதிகளிலிருந்து யூதக் குடியிருப்புகள் முற்றிலுமாக அகற்றப்பட்டிருக்கின்றன.

ஆனால் ஆயுதப் போராட்டம் இதுவரை சாதித்தது என்ன?

ஆண்டவனும் ஆண்டவர்களும் கைவிட்ட நிலையில் ஆயுதத்தைத்தான் நம்பவேண்டும் என்று அம்மக்கள் கருதியதைக் குறை சொல்லமுடியாது. ஆனால், ஆயுதங்களைக் காட்டிலும் பேச்சுவார்த்தைகள் வலிமைமிக்கவை என்பதை சரித்திரம் தொடர்ந்து நிரூபித்து வந்திருப்பதை அவர்கள் கணக்கில் எடுத்துக்கொண்டாக வேண்டியிருக்கிறது.

இருபத்தோறாம் நூற்றாண்டில் ஆயுதப் போராட்டம் சாதிக்கக்கூடியவையாக உலகில் ஏதுமிருப்பதாகத் தெரியவில்லை.

உண்மையில் பாலஸ்தீன் சுதந்திரத்துக்கு முன்னால் அங்கே நிறைய வேலை வாய்ப்புகளை உருவாக்கவேண்டிய கட்டாயம் அப்பாஸுக்கு இருக்கிறது.

அது ஒன்றுதான் இளைஞர்களை ஆயுதமேந்தவிடாமல் தடுக்கும். ஒரு புதிய தேசத்தைக் கட்டுவதென்பது சாதாரண காரியமல்ல. தேசம் பிறக்கட்டும், பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று இருக்காமல் இந்த விஷயத்தில் மட்டும் அப்பாஸ் இஸ்ரேலையே ஒரு முன்னுதாரணமாகக் கொண்டு செயல்படலாம், தப்பில்லை.

ஐம்பது ஆண்டுகளில் பாலஸ்தீன் அரேபியர்கள் எத்தனை போராட்டங்களை எதிர்கொண்டார்களோ, அதே அளவு போராட்டங்களை இஸ்ரேலும் சந்தித்திருக்கிறது. அதனால் இஸ்ரேலின் வளர்ச்சி பாதிக்கப்பட்டிருக்கிறதா?

இல்லை அல்லவா? பாலஸ்தீனியர்கள் மட்டும் ஏன் இன்னும் மத்தியக் கிழக்கின் நோஞ்சான் குழந்தைகளாகவே இருக்கிறார்கள்?

இஸ்ரேல் ஒரு தேசம்; பாலஸ்தீன் ஒரு கனவு என்று இதற்குப் பதில் சொல்லலாம்.

ஆனால் கனவு நனவாகப்போகிற நாள் வெகுதூரத்தில் இல்லை என்பதை மனத்தில் கொண்டு இனியாவது ஆக்கபூர்வமான முயற்சிகளை மேற்கொள்ள பாலஸ்தீனியர்கள் மனத்தளவில் தயாராகவேண்டும்.

பாலஸ்தீனுக்கு உதவுவதை உலக நாடுகள் அனைத்தும் தமது கடமையாக நினைத்துச் செயல்பட்டாக வேண்டும். ஒரு நூறு பன்னாட்டு நிறுவனங்கள் பாலஸ்தீனில் ஒரே சமயத்தில் கிளை திறந்தால் நடக்கக்கூடிய நல்லவற்றைச் சற்று யோசித்துப் பாருங்கள். இதற்கு ஏன் யாரும் முயற்சி எடுக்கவில்லை?

ஜெருசலேம். இதனை விலக்கிவிட்டு பாலஸ்தீன் பிரச்னை குறித்துப் பேசவே முடியாது என்பது எத்தனை உண்மையோ, அதே அளவு உண்மை ஜெருசலேம் குறித்த பிரச்னையைத் தீர்க்கவும் முடியாது என்பது.

ஐ.நா.வின் சிறப்புக் கண்காணிப்பின் கீழ் இருக்கும் இந்நகரைப் பாதுகாக்கப்படவேண்டிய, புராதன நகரமாக சிறப்பு கவனத்துக்குட்பட்ட சுற்றுலாத்தலமாக, மும்மதத்தவரும் வந்து வணங்கிவிட்டுச் செல்லக்கூடிய வழிபாட்டுத் தலமாக, அனைவருக்கும் பொதுவான தொல்லியல் நகரமாக ஆக்கி, பராமரிப்புப் பொறுப்பை நிரந்தரமாக ஐக்கிய நாடுகள் சபையே ஏற்பது ஒன்றுதான் வழி.

இஸ்ரேலோ, புதிதாக மலரவிருக்கும் பாலஸ்தீனோ, பக்கத்து தேசமான ஜோர்டனோ வேறெந்த தேசமோ ஜெருசலேத்தைச் சொந்தம் கொண்டாடினால் எப்போதும் பிரச்னைதான். இதில் கிழக்கு ஜெருசலேம், மேற்கு ஜெருசலேம் என்கிற பிரிவினைகள் கூடப் பிரச்னைக்கு வழிவகுக்கக்கூடியதுதான்.

ஜெருசலேம் யாருடையது என்கிற கேள்வி இருக்கும் வரை பாலஸ்தீனுக்கு அமைதி கிடையாது. மனத்தளவில் அனைவரும் உணர்ந்த இந்த உண்மையைச் செயல் அளவிலும் கடைப்பிடிக்க இரு தரப்பினரும் தயாராகிவிட்டால், பாலஸ்தீன் சுதந்திரம் கைக்கெட்டும் தூரம்தான்.
நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 10 நவம்பர், 2005

100.The End] நிலமெல்லாம் ரத்தம் - நிறைவுரை.
நிலமெல்லாம் ரத்தம்-பா.ரா-நிறைவுரை 100.

களத்துக்கு நேரே சென்று ஆராய்ச்சி செய்து எழுதும் ஆய்வாளன் அல்ல நான். அதற்கான வசதி வாய்ப்புகளுமமிங்கே இல்லை. புத்தகங்கள் மற்றும் ஆவணங்கள் தரும் செய்திகளின் அடிப்படையில் மட்டுமே இந்த வரலாறு எழுதப்பட்டிருக்கிறது.

சில வல்லுநர்கள் அவ்வப்போது பிழை திருத்தி உதவியிருக்கிறார்கள் என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

இனி, குமுதம் ரிப்போர்ட்டர் இதழில் வெளியான ஆதாரங்களின் பட்டியல் மற்றும் நன்றிக் குறிப்பு:

உதவிய நூல்களின் பட்டியல்:
1. பரிசுத்த வேதாகமம் (பைபிள் சொஸைடி ஆஃப் இந்தியா வெளியீடு)
2. The Holy Qur - An - English Translation of the Meanings and commentary - The Presidency of Islamic Researches, IFTA, Soudi Arabia வெளியீடு.
3. 'The 5000 Year History of the Jewish People and Their Faith. (மார்ட்டின் கில்பர்ட், Phoenix வெளியீடு)
4. A Historey of the Middle East - Peter Mansfield, பெங்குயின் வெளியீடு.
5. The Politics of Dispossession - Edward Said
6. Peace and its Discontents - Edward Said
7. Muhammad: His life based on the earliest sources - Martin Lings
8. ரஹீக், ஸஃபிய்யுர் ரஹ்மான் (மொழிபெயர்ப்பு: ஏ. ஓமர் ஷெரீஃப், தாருல் ஹுதா, சென்னை 1 வெளியீடு.)
9. O, Jerusalem - Larry Collins, Dominique Lapierre
10. The Middle East : Yesterday and Today - Edited by David W. Miller, Clark D. Moore (Bantom Books)
11. Umar The Great - Allamah Shibli Nu'mani (Muhammad Ashraf, Pakistan)
12. மத்தியக் கிழக்கின் சிறப்பு வரலாறு - அ. உஸ்மான் ஷெரீப், தமிழ்நாட்டுப் பாடநூல் நிறுவனம்
13. Israel and the Arabs - Israel Communications, Jerusalem
14. 90 Minutes at Entebbe, William Stevenson (Bantam Books, New York)
15. நபிகள் நாயகம், அப்துற் றஹீம் (யூனிவர்ஸல் பப்ளிஷர்ஸ், சென்னை)
16. இஸ்லாம் ஓர் எளிய அறிமுகம் - நாகூர் ரூமி (கிழக்கு பதிப்பகம், சென்னை)
17. ஃபலஸ்தீன முஸ்லிம்கள் அகதிகளான வரலாறு, மு. குலாம் முஹம்மது (இலக்கியச் சோலை, சென்னை 600 003)
18. பாலஸ்தீன வரலாறு (பாகம் 1), எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ் (புத்தொளிப்பதிப்பகம், சென்னை 600 001)
19. Cross Roads to Israel, Christopher Sykes (collins, UK)
20. State of Palestine, Esam Shashaa21. Palestine Refugees, Esam Shashaa22. In the arms of a Father, Haneen al - Far23. UN Report, Intifada, United Nations Publication24. Ancient History of Palestine, Abu Sharar

சில சொற்கள்:
மேற்சொன்ன புத்தகங்கள் தவிர நூற்றுக்கணக்கான சிறு வெளியீடுகள், ஏராளமான இணையத்தளங்களின் தகவல் உதவிகள் இல்லாமல் இத்தொடர் சாத்தியமாகியிருக்க முடியாது.

நிலமெல்லாம் ரத்தம் தொடரை எழுத ஆரம்பித்ததிலிருந்து, அத்தியாயம் தோறும் இதன் தகவல்களைச் சரிபார்த்து, உரிய திருத்தங்கள் செய்து தந்ததோடு மட்டுமல்லாமல், எனக்கு மிகவும் தேவைப்பட்ட பல அபூர்வமான நூல்களையும் அளித்து உதவியவர் பேராசிரியர், எழுத்தாளர் நாகூர் ரூமி.
(மஸ்ஹரூல் உலூம் கல்லூரி, ஆம்பூர்.) இந்தத் தொடருக்காக அவருக்குப் பல தூக்கமில்லாத இரவுகளை வழங்கியிருக்கிறேன். பொறுமையுடன் உதவிகள் புரிந்த அவருக்கு என் நன்றி.

சென்னை இஸ்லாமிக் ஃபவுண்டேஷன் டிரஸ்ட் அமைப்பும் சமரசம் மாத இதழின் ஆசிரியர் சிராஜுல் ஹஸன் அவர்களும் சில முக்கியமான புத்தகங்களை வழங்கி உதவினார்கள்.

எனக்கு முன்பின் அறிமுகமில்லாத ஏராளமான வாசக அன்பர்கள் பாலஸ்தீன் தொடர்பாகத் தம்மிடம் இருந்த அத்தனை புத்தகங்களையும் சிறு வெளியீடுகளையும் இந்த ஒரு வருடகாலமும் எனக்கு அனுப்பிக்கொண்டே இருந்த அன்புக்கு நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன்.

குறிப்பாக மதுரையைச் சேர்ந்த வாசகர்கள் ஏ. ஜாகீர் மற்றும் தூளான்; சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த வாசகர் வெங்கடேசன், ஊட்டி ரன்னிமேடு பகுதியைச் சேர்ந்த வாசகர் தேவசகாயம், கோவையைச் சேர்ந்த முகம்மது கனி ஆகியோரின் ஆர்வத்தைத் தனியே குறிப்பிட விரும்புகிறேன்.

பாலஸ்தீன் பிரச்னை தொடர்பாக இதுகாறும் இந்தியாவில் வெளியாகியுள்ள அத்தனை பத்திரிகைக் குறிப்புகள், பேட்டிகள், கட்டுரைகள், ஆய்வுக் குறிப்புகளையும் எங்கெங்கிருந்தோ தேடி நகலெடுத்து எனக்கு அனுப்பிக்கொண்டே இருந்தவர்கள் இவர்கள்.

இந்தத் தொடர், சர்வதேசத் தமிழ் வாசகர்கள் அத்தனை பேரையும் சென்றடையவேண்டும் என்கிற நோக்கில், ரிப்போர்ட்டரில் வெளியானவுடனேயே ஒவ்வொரு வாரமும் பிரதியெடுத்து, தட்டச்சு செய்து, ரிப்போர்ட்டருக்கு நன்றி சொல்லித் தனது பிரத்தியேக வலைப்பதிவில் வெளியிட்டுவந்த தைவானைச் சேர்ந்த ரிப்போர்ட்டர் வாசகர் கிறிஸ்டோபர் ஜான் (http://christopher_john.blogspot.com/) அவர்களுக்கு என் அன்பு.

இந்தப் பணி இந்த அளவில் சாத்தியமானதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவிகள் புரிந்த அத்தனை பேருக்கும் மீண்டும் என் மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

ஆர்வமுடன் வாசித்து, அவ்வப்போது கடிதங்கள் மூலமும் மின்னஞ்சல் மூலமும் தொலைபேசி மூலமும் உற்சாகமூட்டிய வாசகப் பெருமக்களுக்கும்.
பா. ராகவன்.
*******************************************
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

( 73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(97-98). (99.100.

யூதர்கள்‍, பலஸ்தீன், இஸ்ரேல் வரலாறு.

1 comment:

dondu(#11168674346665545885) said...

பொறுமையாக எல்லா பதிவுகளையும் நகலெடுத்து ஒட்டியுள்ளீர்கள். அந்த பொறுமைக்கு பாராட்டு. ஆனால் அத்துடன் போதும் என இருந்து விட்டீர்களா? பலவிஷயங்களுக்கு உங்களது எதிர்வினையை எதிர்பார்த்து ஏமாந்தேன். முக்கியமாக கீழ்க்கண்டவற்றுக்கு:

1. 1948-ல் இரு தேசங்கள் உருவாக ஐ.நா. சபை வழிவகுத்தது. ஆனால் அவற்றில் இஸ்ரேல் மட்டுமே செயல்படத் துவங்கியது. பாலஸ்தீனம் செயல்படவில்லை என்பதற்கும் மேல், இஸ்ரவேலர்களை ஒழிக்கப் போவதாக அரபு தேசங்கள் தந்த பொய் உறுதிகளை நம்பி இருந்த பிரதேசங்களையும் எகிப்திடமும் ஜோர்டனிடமும் கோட்டை விட்டதுதானே நடந்தது? இதில் ஜோர்டானும் எகிப்தும் கௌரவமான முறையில் நடந்து கொண்டதாக நம்புகிறீர்களா?

2. ஜெரூசலத்தில் யூதர்களின் அழுகைச்சுவரை 1967 வரை ஜோர்டான் எவ்வளவு கேவலப்படுத்த முடியுமோ அவ்வளவு செய்தது.

3. பாலஸ்தீனர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம் அராஃபாத்தின் விதவையிடம் போய் மாட்டிக் கொண்டது.

அன்புடன்,
டோண்டு ராகவன்