Friday, March 20, 2009

65.66 தாக்குதலுக்கு மூன்று காரணங்கள் என்னென்ன? என்ன அழகான திட்டம்! பகுதி. 65-66.

65] தாக்குதலுக்கு அந்த மூன்று காரணங்கள் என்னென்ன?

அந்த மூன்று காரணங்கள்.
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 65

இஸ்ரேல் உருவான போது காஸா பகுதி இஸ்ரேலின் பெருமைக்குரிய இடங்களுள் ஒன்றாக இருந்தது.

1948 யுத்தத்தின்போது அது எகிப்து வசமானதை ஏற்கெனவே பார்த்தோம்.

எப்படியாவது காஸாவை எகிப்திடமிருந்து மீட்டு விட வேண்டுமென்பது தான் இஸ்ரேலின் அடிப்படை எண்ணம். இழந்த பகுதியை மீட்கும் சாக்கில் இன்னும் கொஞ்சம் சேர்த்துச் சாப்பிட முடிந்தால் சந்தோஷம்தானே?

இந்தத் திட்டத்துடன்தான் இஸ்ரேல் ராணுவம் காஸா வழியாக எகிப்தினுள் புகுந்தது. யுத்தம் வரத்தான் போகிறது என்பது நாசருக்குத் தெரியுமென்றாலும் சற்றும் எதிர்பாராத கணத்தில் இஸ்ரேல் தனது ஊடுருவலை நிகழ்த்திவிட்டதால், எகிப்தினால் முதலில் சுதாரித்துக்கொள்ள முடியவில்லை.

காஸா முழுவதையும் கைப்பற்றிக்கொண்டு, நின்று மூச்சு விடக்கூட அவகாசமில்லாமல் நேரே சினாய்ப் பகுதியினுள் புகுந்து விட்டது இஸ்ரேல் ராணுவம்.

சினாய் என்கிற இன்றைய எகிப்தின் ஒரு மாநிலப் பரப்புக்கு ஓர் இதிகாசப் பெருமை உண்டு. அது ஒரு பெரிய பாலைவனப்பகுதி.

மணலையும் வெயிலையும் தவிர, வேறு எதுவும் அங்கே கிடையாது. மக்கள் வாழ முடியுமா என்றால் அதுவும் கிடையாது.

(ஆங்காங்கே சில நாடோடிக் கூட்டங்கள் வசிப்பதுண்டு. ஆனால் நான் பெங்களூரில் இருக்கிறேன், சென்னையில் இருக்கிறேன் என்று சொல்வது மாதிரி சினாயில் இருக்கிறேன் என்று சொல்லிக்கொள்ளும் அளவுக்கு மக்கள் கிடையாது.)

ஆனால், மோசஸ் என்கிற இறைத்தூதர் இங்கே ஒரு சிறு குன்றின் மீது ஆடு மேய்த்துக்கொண்டிருந்த போதுதான் அவருக்கு தேவ வசனங்கள் அருளப்பட்டதாக நம்பிக்கை. (பத்து கட்டளைகள்.) அந்த வகையில் சினாய், எகிப்தின் முக்கியப் பிராந்தியங்களுள் ஒன்றாகிறது. பெருமைக்குரிய புனிதப் பாலைவனம்.

காஸா வழியே புறப்பட்ட இஸ்ரேலியப் படைகள், சினாய் பாலைவனத்தைக் கடக்கும்போது, பெரிய எதிர்ப்புகள் ஏதும் அவர்களுக்கு இல்லை. மேலும் ஆளற்ற பாலைவனத்தில் ஊடுருவுவதும் சுலபம். அப்படி ஊடுருவி எத்தனை தூரத்துக்கு ஒரு படை முன்னேறிவிடுகிறதோ, அதுவரை வேலி போட்டு கையகப்படுத்தி விடுவதுதான் வழக்கம். அப்புறம் சண்டைக்கு வந்தால் பார்த்துக்கொள்ளலாம், அப்போதைக்கு அது நம் இடம் என்கிற கணக்கு.

ஒரு பக்கம் இஸ்ரேல் இப்படி ஊடுருவிக்கொண்டிருந்த அதே சமயம், இன்னொருபுறம் இஸ்ரேலுக்கு உதவிக்கு வந்த இங்கிலாந்தும் பிரான்ஸும் சைப்ரஸ் தீவிலும் மால்டாவிலும் தன்னுடைய போர் விமானங்களைத் தயாராக நிறுத்தி, வான்வழித் தாக்குதலுக்கு ஆயத்தங்கள் மேற்கொள்ள ஆரம்பித்தன.

உண்மையில் இங்கிலாந்தும் பிரான்ஸும் கொண்டுவந்து குவித்த விமானங்களுக்கும் ஆயுதத் தளவாடங்களுக்கும் அந்த இரு இடங்களில் இருந்த விமானத்தளங்கள் சுத்தமாகப் போதவில்லை.

மிகவும் பாழடைந்திருந்த தளங்களிலிருந்துதான் அந்த இரு தேசங்களும் தம்முடைய தாக்குதலைத் தொடங்கின.

அக்டோபர் 31-ம் தேதி பிரான்ஸ் தனது நேரடித் தாக்குதலை ஆரம்பித்தது. விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களிலிருந்து எகிப்தின் அத்தனை மாகாணங்களின் மீதும் குண்டு வீசத் தொடங்கினார்கள். இங்கிலாந்தும் மறுநாளிலிருந்து தன்னுடைய தாக்குதலை ஆரம்பித்துவிட்டது.

சூயஸ் கால்வாயை மீட்பதற்காகத் தொடங்கப்பட்ட இந்த மும்முனைத் தாக்குதலுக்கு ஆப்பரேஷன் மஸ்கடீர்
என்று பெயரிட்டார்கள். மஸ்கடீர் என்கிற சொல்லில் விசேஷம் ஏதுமில்லை. ஆயுதமேந்திய போர்வீரன். அவ்வளவுதான்.

ஆனால் இந்த ஆப்பரேஷன் மஸ்கடீர் என்று பெயரிட்டு ஒரு போரைத் தொடங்கினால் அந்தப் போருக்குக் குறைந்தது மூன்று நோக்கங்களாவது இருக்கும் என்பது சரித்திரம்.

இரண்டாம் உலகப்போர் சமயம் பிலிப்பைன்ஸைக் கைப்பற்றுவதற்காக அமெரிக்கத் தளபதி டக்ளஸ் மெக் ஆர்த்தர் மேற்கொண்ட யுத்தத்துக்கு இதே பெயர்தான் வைக்கப்பட்டது.

இன்னும் ஒரு சில யுத்தங்களுக்கும் இதற்கு முன்னால் இப்பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. ஆனால் ஒவ்வொரு யுத்தத்துக்கும் மூன்று நோக்கங்கள் அவசியம் உண்டு.
எகிப்தின் மீதான இந்த மூன்று தேசங்களின் தாக்குதலுக்கு அந்த மூன்று காரணங்கள் என்னென்ன?

1. சூயஸ் கால்வாயை மீட்பது.

2. எகிப்து அதிபர் நாசரைக் கொஞ்சம் பயமுறுத்தி வைப்பது, முடிந்தால் பணியவைப்பது.

3. மத்தியக்கிழக்கில் உள்ள அத்தனை அரபு தேசங்களுக்கும் ஐரோப்பாவின் மீது எப்போதும் கொஞ்சம் நிரந்தரமான பயம் இருக்கும்படி பார்த்துக்கொள்வது.

வெளியே பேசப்பட்ட காரணங்கள் இவைதான் என்றாலும். உண்மைக் காரணங்கள் அனைத்துமே பொருளாதாரம் மற்றும் வர்த்தகம் சம்பந்தப்பட்டவை.

அனைத்து ஐரோப்பிய தேசங்களுமே (அப்போது சற்றும்) வளராத ஆசிய, கிழக்காசிய தேசங்களில் தங்கள் வர்த்தக சாத்தியங்களை விரிவாக்கி, பெரிய, நிரந்தரமான மார்க்கெட்டைப் பிடிப்பதில் குறியாக இருந்தன.

இந்தியா, இலங்கை, மலேசியா, தாய்லாந்து போன்ற தேசங்களில் ஐரோப்பியக் கடைகள் விரிக்கப்படும் பணி மிக மும்முரமாக நடைபெற்றுக்கொண்டிருந்தது. சூயஸ் கால்வாய்தான் இது எல்லாவற்றுக்குமே ஆதார வழி.

ஆகவே சூயஸை எகிப்திடமிருந்து மீட்பதுடன் மட்டுமல்லாமல், இனி எக்காலத்திலும் எந்தப் பிரச்னையும் வராத அளவுக்கு சர்வதேசச் சட்டங்களில் திருத்தம் செய்து சூயஸை ஒரு பொதுவுடைமைச் சொத்தாக்குவதில் மேற்சொன்ன தேசங்கள் மிகத் தீவிரமாக இருந்தன.

இஸ்ரேலுக்கு இதனைக் காட்டிலும் முக்கிய நோக்கம், இடம் பிடிப்பது.

அதாவது இழந்த காஸா பகுதி. மேலும் தானாகக் கையில் விழுந்த சினாயை நிரந்தரமாக வைத்துக்கொள்வது. நிலப்பரப்பை விஸ்தரித்துக் கொள்வதன் மூலமே மத்திய ஆசிய அரபு தேசங்களிடையே தன்னைப் பற்றியதொரு அச்சத்தைத் தோற்றுவிக்க முடியும் என்று இஸ்ரேல் நம்பியது.

தாக்குதல் மிகவும் சூடுபிடித்தது. இங்கிலாந்தும் பிரான்ஸும் நிகழ்த்திய வான்வழித் தாக்குதலுக்கு நாசர், நீர் வழியே பதில் சொன்னார்.

கட்டுப்பாட்டை மீறி சூயஸ் கால்வாய்க்குள் அப்போது இந்த மூன்று தேசங்களின் போர்க்கப்பல்கள் (சுமார் நாற்பது) அணி வகுத்து வந்துகொண்டிருந்தன. நாசர், ஒரு வினாடிகூட யோசிக்காமல் அந்த நாற்பது கப்பல்களையும் பீரங்கிகளைக் கொண்டு சுட்டு வீழ்த்த உத்தரவிட்டார்.

அவற்றுள் சுமார் இருபது கப்பல்கள் பிரான்ஸினுடையவை. பதினைந்து கப்பல்கள் இங்கிலாந்துடையவை. மிச்சமெல்லாம் இஸ்ரேலுக்குச் சொந்தமானவை.

சூயஸ் கால்வாய்க்குள் வந்துகொண்டிருந்த இந்தக் கப்பல்களை எகிப்து ராணுவம் மூன்று முனைகளிலிருந்து தாக்கின. விமானத் தாக்குதல் ஒரு பக்கம். நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் இன்னொரு பக்கம். நிலத்தில் இருந்தபடியே பீரங்கிகள் மூலம் தாக்குதல் நடத்துவது மூன்றாவது.

சற்றும் குறி தவறாமல் நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலில் அந்த நாற்பது கப்பல்களும் மூழ்கிப் போயின.

இது இங்கிலாந்து, பிரான்ஸ் மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்குமே அதிர்ச்சியளிக்கும் விஷயமாக இருந்தது.

நாசரைக் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று ஐரோப்பா முதல் முதலில் முடிவு செய்தது அப்போதுதான்.

நவம்பர் ஐந்தாம் தேதி கூட்டணிப் படைகள் பாராசூட் மூலம் எகிப்தின் பாலைவனப் பகுதிகளில் ராணுவ வீரர்களை இறக்கிவிட்டு ஊருக்குள் ஊடுருவ உத்தரவிட்டன.

விமானத் தாக்குதலுக்குச் சாதகமாக நகர்ப்புறங்களிலும் புற நகர்ப்பகுதிகளிலும் ஆயத்தங்கள் செய்து வைக்க வேண்டுமென்பது இந்த இறக்கிவிடப்பட்ட வீரர்களுக்கு அளிக்கப்பட்ட உத்தரவு.

இந்த வீரர்களுள் இரண்டு பேர் மறுநாள் காலையே தமது பணியின் அதிகபட்ச சாத்தியத்தைத் தொட்டார்கள்.

எகிப்தின் கிழக்கு மற்றும் தெற்கு கடற்கரையோரம் இறக்கி விடப்பட்ட இந்த இரண்டு பேரும் (பெயர்கள் தெரியவில்லை இருவரும் கமாண்டோக்கள்.) ஆளுக்கு ஒரு சக்திமிக்க வெடிகுண்டை இயக்கி, பிராந்தியத்தையே நிலைகுலையச் செய்தார்கள்.

மக்கள் அலையலையாக அலறிக்கொண்டு ஓடத் தொடங்கினார்கள். மறுபுறம் போர்ட் சயீத் துறைமுகத்தின் மீது பிரெஞ்சுப் படைகள் நிகழ்த்திய கெரில்லாத் தாக்குதலில் துறைமுகம் முற்றிலுமாகச் சீர்குலைந்து போனது.

எகிப்து ராணுவம் தன்னால் இயன்ற அளவுக்குத் தற்காப்புத் தாக்குதலில் ஈடுபட்டபோதும், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலின் கூட்டணிப் படையின் அளவுக்கு முன்னால் எகிப்து ராணுவம் அளவிலும் தரத்திலும் மிகவும் பின்தங்கியிருந்ததால் அவர்களால் பெரிய அளவில் சாதிக்க இயலவில்லை.

ராணுவ ரீதியில் எகிப்துக்கு இந்த சூயஸ் யுத்தம் ஒரு பெரிய தோல்விதான். இதில் சந்தேகமே இல்லை. ஆனால் அரசியல் ரீதியில் மிகப்பெரிய வெற்றியை இது அவர்களுக்குத் தேடித்தந்தது.

சற்று நுணுக்கமாகக் கவனிக்க வேண்டிய விஷயம் இது.

சற்றேறக் குறைய இதே 1956 காலகட்டத்தில் ஹங்கேரியில் ஒரு புரட்சி வெடித்தது. இதைச் சிறிய புரட்சி என்றோ பெரிய கலவரம் என்றோ சொல்லலாம். இந்தப் புரட்சிக்குக் காரணமாக, பின்னணியில் இருந்து செயல்பட்டது, அமெரிக்கா.

வழக்கம்போல அமெரிக்க உளவு அமைப்பான சி.ஐ.ஏ., ஹங்கேரியில் ஆட்சியாளர்களுக்கு எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருந்த புரட்சியாளர்களை ஒருங்கிணைத்து, பயிற்சியளித்து, அரசுக்கு எதிரானதொரு யுத்தத்தை ஆரம்பித்து வைத்தது.

ஆனால், இந்தப் புரட்சியின் பின்னணியில், தான் இருப்பதாகவே சி.ஐ.ஏ. அந்த முறை காட்டிக்கொள்ளவில்லை.

அமெரிக்கத் தொடர்பு இருப்பது வெளியே தெரியவேண்டாம் என்றே அப்போதைய அமெரிக்க அதிபர் ஐசனோவர் கருதினார்.

ஆனாலும் இதெல்லாம் மூடி வைக்கக்கூடிய விஷயம் இல்லை என்பதால் விஷயம் வெளியே பரவிவிட்டது.

உடனே அமெரிக்காவின் பரம எதிரியான சோவியத் யூனியன், உலகெங்கும் அமெரிக்காவின் இந்தச் சிறுமைத்தனத்தைப் பறைசாற்ற ஆரம்பிக்க, பல தேசங்களில் குறிப்பாக, மூன்றாம் உலக நாடுகளில் அமெரிக்காவைப் பற்றிப் பேசினாலே மக்கள் காறித்துப்ப ஆரம்பித்தார்கள்.

எப்படி ஹங்கேரி விஷயத்தில் அமெரிக்கா அவமானப்பட்டதோ, அதே போல சூயஸ் கால்வாய் விஷயத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவாக இங்கிலாந்தும் பிரான்ஸும் போரில் குதித்ததற்கு பல்வேறு உலக நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்தன.

எகிப்து ஒரு கொசு. பொருளாதார ரீதியில் அதுவரை எந்த ஒரு வளர்ச்சியையும் காணாத ஏழை தேசம். அங்கே போய் இப்படியா செத்த எலியை அடித்துக்கொண்டிருப்பது என்று உலகமே இந்த இரு தேசங்களைப் பார்த்து ஏளனம் செய்தது.

மேலும் சூயஸ் கால்வாய் பிரச்னையின் வேர் எது என்கிற விவரம் முழுதும் அறியாத பாமர மக்களுக்கு, எகிப்தினுள் புகுந்து இந்த தேசங்கள் தாக்குதல் நிகழ்த்தியது அயோக்கியத்தனம் என்றே தோன்றியது.

தவிரவும் இஸ்ரேலுக்கு ஆதரவாக அல்லவா இவர்கள் இறங்கியிருக்கிறார்கள்? இஸ்ரேல் யார்? அது ஒரு அமெரிக்க அடிவருடி அல்லவா? மேலும் அரேபிய முஸ்லிம்களுக்கு துரோகம் இழைத்தவர்கள்.

பாலஸ்தீனியர்களை அநியாயமாக அகதிகளாக்கியவர்கள். அவர்களுக்குப் போய் இங்கிலாந்தும் பிரான்ஸும் ஒத்துழைப்புக் கொடுத்தன என்றால், அந்த இரு தேசங்களின் யோக்கியதை என்ன என்று பேச ஆரம்பித்து விட்டார்கள்.

உண்மையிலேயே பிரிட்டன் இதனை எதிர்பார்க்கவில்லை.

சூயஸ் கால்வாய் ஒரு பொதுச்சொத்து என்று எத்தனை எடுத்துச் சொன்னாலும் யாரும் கேட்கத் தயாராக இல்லை. வீண் வம்பாகத்தான் எகிப்தின் மீது தாக்குதல் நிகழ்த்தினார்கள் என்று ஒட்டுமொத்த மூன்றாம் உலக தேசங்களும் எதிர்ப்புத் தெரிவித்துவிட்டன.

யுத்தம் தொடங்கிய ஓரிரு தினங்களிலேயே இன்னொரு கூத்தும் அரங்கேறியது.

பிரிட்டனும் பிரான்ஸும் இஸ்ரேலை ஆதரிக்கின்றன என்று தெரிந்ததுமே சோவியத் யூனியன், எகிப்துக்குத் தன்னுடைய முழு ஆதரவைத் தெரிவித்ததுடன் அல்லாமல், தேவைப்பட்டால், தானும் யுத்தத்தில் எகிப்தின் சார்பில் பங்கேற்க வருவேன் என்று பயமுறுத்தியது.

சோவியத் யூனியன் யுத்தத்தில் பங்கெடுத்தால் பிரிட்டன் அவசியம் அமெரிக்காவைத் துணைக்குக் கூப்பிடும்.

அமெரிக்காவும் களத்தில் இறங்கினால், அது சூயஸ் கால்வாய், எகிப்து, இஸ்ரேல் என்கிற எல்லைகளைக் கடந்து ஒற்றைப் பரிமாணம் பெற்று அமெரிக்க சோவியத் யுத்தமாகிவிடும்.

அவர்களின் தனிப் பகைக்கு எகிப்து பலிகடாவாகும். என்னென்னவெல்லாமோ நடந்துவிடும்.

இது பெரும் அபாயம். பிரிட்டனே கூடக் கூப்பிடவேண்டாம். சோவியத் களமிறங்கியது தெரிந்தாலே அமெரிக்காவுக்குப் போதும். தானாகவே கூட அந்தத் தேசம் யுத்தகளத்துக்கு வந்து இறங்கிவிடும்.

இவ்வாறு அத்தனை தேசங்களுமே எண்ணிக் கவலைப் பட்டுக்கொண்டிருக்க, எதிர்பாராததொரு திருப்பமாக, அமெரிக்காவே முன்வந்து போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்தது.

ஒரு பக்கம் பிரிட்டனிடமும் பிரான்ஸிடமும் கலந்து பேசி யுத்தத்தைக் கைவிடச் சொல்லிவிட்டு, மறுபக்கம் எகிப்து அதிபர் நாசருடன் அமெரிக்க அதிபர் ஐசனோவரே பேசினார்.

முதலில் பிரிட்டன் இதற்கு மறுத்தது. சூயஸ் கால்வாயை நாசர் திறந்து விட்டாலொழிய யுத்தத்தை நிறுத்துவது சாத்தியமில்லை என்று சொன்னது.

அமெரிக்கா விடவில்லை. 'காரணங்களைக் கேட்காதீர்கள். போரை நிறுத்தாவிட்டால் பிரிட்டனின் நாணயமான 'பவுண்ட்'டின் மதிப்பை அமெரிக்கா வீழ்த்திவிடும்' என்று பகிரங்கமாக மிரட்டத் தொடங்கியது.

நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர் 14 ஜூலை, 2005

66] என்ன அழகான திட்டம்!
நிலமெல்லாம் ரத்தம் - பா. ராகவன் 66

அமெரிக்க டாலரை 'ரிசர்வ் கரன்ஸி' என்பார்கள். மதிப்பு மிக்க நாணயம்.

எண்ணெய், தங்கம் போன்ற விலை மதிப்பு மிக்க பொருள்களின் வர்த்தகம், சர்வதேச அளவில் டாலரில்தான் நடக்கும்.

மற்ற தேசங்களின் கரன்ஸி எத்தனை மதிப்பு மிக்கது என்பதை அமெரிக்க டாலருடன் ஒப்பிட்டுத்தான் சொல்வது வழக்கம்.

அதாவது, 'அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு' என்று சொல்லப்படுவதைக் கேட்டிருப்பீர்கள் அல்லவா? அதுதான்.

அமெரிக்க டாலரைக் காட்டிலும் இன்றைக்கு 'யூரோ'வின் மதிப்பு அதிகம். ஜப்பானின் 'யென்', ஸ்விட்சர்லாந்தின் 'ஸ்விஸ் ஃப்ராங்க்', இங்கிலாந்தின் 'பவுண்ட் ஸ்டெர்லிங்' ஆகியவையும் மதிப்பு மிக்க நாணயங்கள்.

இந்த நாணயங்களெல்லாம் சமீப காலத்தில் மதிப்பு பெற்றவை. ஐம்பதுகளில் அமெரிக்க டாலர் ஒன்றுதான் 'ரிசர்வ் கரன்ஸி'. ஒவ்வொரு தேசமும் தனது அந்நியச் செலாவணியாக எத்தனை டாலர்கள் வைத்திருக்கிறது என்பதைக் கொண்டு அதன் பொருளாதார நிலைமை மதிப்பிடப்படும்.

அது மட்டுமில்லாமல், எந்த தேசமும் தான் இறக்குமதி செய்துகொள்ளும் எந்தப் பொருளுக்கும் அமெரிக்க டாலரில் விலை கொடுக்குமானால் கணிசமான தள்ளுபடி கிடைக்கும்!

காரணம், அந்த தேசத்தின் அந்நியச் செலாவணி டாலரில் கிடைக்கிறதல்லவா, அதனால்தான்!

இந்த 'ரிஸர்வ் கரன்ஸி' அந்தஸ்தை வைத்துக்கொண்டுதான் அமெரிக்கா அன்றைக்கு பிரிட்டனை மிரட்டியது.

'மரியாதையாக சூயஸ் யுத்தத்தை நிறுத்துகிறீர்களா? அல்லது, நான் என் ரிசர்வ் கரன்ஸி முதலீடுகளை நிறுத்திக்கொள்ளவா?'

இதுதான் மிரட்டல். மிரட்டியதோடு அமெரிக்கா நிற்கவில்லை.

கொஞ்சம் பயமுறுத்தும் விதத்தில் ஓரளவு தன்னுடைய முதலீடுகளையும் முடக்கிவைத்தது.

இதனால் ஒரே நாளில் பிரிட்டனின் 'பவுண்ட்' மதிப்பு தடதடவென்று சரிந்தது. நாணயத்தின் மதிப்பு சரிந்தால் நாடே சரிகிறது என்று அர்த்தம்.

ஆகவே பிரிட்டனின் அன்றைய பிரதமர் ஆண்டனி ஈடன் வலுக்கட்டாயமாக ராஜினாமா செய்யவேண்டியதானது.

அவசரமாக பிரிட்டிஷ் பாராளுமன்றம் கூடி, எகிப்திலிருந்து படைகளை வாபஸ் பெற முடிவு செய்தது. இது நடந்தது மார்ச் 1957-ல்.

இதற்குச் சில தினங்கள் முன்னதாக கனடாவின் அன்றைய வெளிவிவகாரத் துறை அமைச்சராக இருந்த லெஸ்டர் பியர்ஸன் (Lester Pearson) என்பவர் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு நேரில் சென்று, சூயஸ் விவகாரத்துக்கு ஒரு முடிவு காண ஒரு தனி நபர் போராட்டத்தை நடத்தினார்.

'சூயஸ் கால்வாய் எல்லா தேசங்களுக்கும் பொதுவானதாக இருப்பதன் பொருட்டு, ஐ.நா.வே ஒரு பாதுகாப்புப் படையை உருவாக்கி எகிப்துக்கு அனுப்பவேண்டும்' என்பது கனடாவின் கோரிக்கை. 'அரசியல் ரீதியிலான தீர்வு ஒன்று காணப்படும்வரை, ஐ.நா.வின் இந்த அதிரடிப்படை சூயஸ் கால்வாய்க் கரையில் முகாமிட்டு உட்கார்ந்தால்தான் வர்த்தகம் தடைபடாமல் இருக்கும்' என்று பியர்ஸன் எடுத்துச் சொன்னார்.

நீண்ட வாக்குவாதங்களுக்குப் பிறகு ஐக்கியநாடுகள் சபை இந்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு எகிப்துக்கு ஒரு ராணுவத்தை அனுப்பியது.

அமைதிப்படையாகத்தான் அனுப்பப்பட்டதென்றாலும் ஆயுதங்களுடன் தான் போனார்கள். (மிகுந்த சாதுர்யமும், அரசியல் முக்கியத்துவமும் வாய்ந்த இந்த யோசனைக்காகவே லெஸ்டர் பியர்ஸனுக்கு 1957-க்கான நோபல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது. இன்றைக்கு உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப் படைப்பிரிவைத் தோற்றுவித்தவரே இவர்தான்.)

எகிப்தின் சூயஸ் கால்வாய் விவகாரம், உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிய விஷயங்கள் பல. அவற்றுள் முக்கியமானது, 'உலகின் மிகப்பெரிய சக்தி என்கிற அந்தஸ்திலிருந்து பிரிட்டன் இறங்கிவிட்டது' என்பது.

உண்மையிலேயே பெரிய சக்தி அமெரிக்காதான் என்பது நிரூபணமானதும் அப்போதுதான்.

அமெரிக்காவுக்கு நிகராக வைத்துப் பேசுவதற்கு சோவியத் யூனியன்தான் இருக்கிறது என்பதும் அப்போது நினைவுகூரப்பட்டது.

இதைக் காட்டிலும் முக்கியமாக உலகம் கவனித்த விஷயம் ஒன்றுண்டு. நாசர் என்கிற நபர் எத்தனை சக்திமிக்கவர் என்பதுதான் அது!

இந்த சூயஸ் கால்வாய் விவகாரத்தில் எகிப்து ராணுவ ரீதியில் தோல்வி கண்டிருந்தபோதும் மத்தியக் கிழக்கின் ஒரே ஹீரோ அவர்தான் என்று அத்தனை நாடுகளும் அடித்துச் சொல்லிவிட்டன.

குறிப்பாக அன்றைய தேதியில் மத்தியக் கிழக்கில் சொல்லிக்கொள்ளும்படியான தலைவர் யாரும் இல்லாத காரணத்தால், நாசரின் இந்தத் துணிச்சலும் வீரமும் வெகுவாகப் புகழப்பட்டன.

நாசரை மையமாக வைத்து, செத்துக்கொண்டிருந்த 'இஸ்லாமிய சகோதரத்துவத்துக்கு' உயிர் கொடுக்க முடியுமா என்று பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.

அத்தனை முஸ்லிம் நாடுகளும் தன்னை இப்போது ஆதரிக்கின்றன என்பதைக் கண்டுகொண்ட நாசர் இன்னும் ஒரு படி மேலே சென்று, 'எகிப்தில் உள்ள அத்தனை யூதர்களும் உடனடியாக வெளியேற வேண்டும்' என்று ஓர் அறிவிப்பு வெளியிட்டார்.

இது இஸ்ரேலுக்கு குலைநடுக்கம் ஏற்படுத்தியது.

ஏனெனில் அன்றைய தேதியில் எகிப்தில் சுமார் முப்பதாயிரம் யூதர்கள் இருப்பார்கள் என்று இஸ்ரேல் நினைத்தது.
(உண்மையில் இருபத்தைந்தாயிரத்துக்குச் சற்று அதிகமானோர் இருந்தார்கள்.)

யுத்தத்தின் விளைவாக, அவர்கள் எந்த நாட்டுக்குப் போனாலும் யாரும் ஏற்கமாட்டார்கள் என்பதால் அத்தனை பேரும் எல்லை தாண்டி இஸ்ரேலுக்குள்தான் வர நினைப்பார்கள்.

இஸ்ரேல், தன்னுடைய சொந்தக் குடிகளை ஏற்பதற்கு எக்காலத்திலும் தயக்கம் காட்டியதில்லை என்றபோதிலும் முப்பதாயிரம் பேருக்கு உடனடியாகத் தங்குமிடம், உணவு உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் அளவுக்கு அப்போது தயாராக இல்லை.

காரணம், யுத்த இழப்புகள்.
ஆனாலும் வேறு வழியில்லை என்று கரம் நீட்டி வரவேற்க சினாய் எல்லையில் தயாரானது இஸ்ரேல் ராணுவம்.
இருபத்தைந்தாயிரம் பேர். அத்தனை பேரும் இரவோடு இரவாக எகிப்திலிருந்து நாடுகடத்தப்பட்டார்கள்.

அது தவிர இன்னும் ஓராயிரம் (சிலர் ஆயிரத்து ஐந்நூறு என்கிறார்கள்.) பேரை நாசர் 'சந்தேகத்தின் பேரில்' சிறையில் அடைத்தார். சில நூறுபேர், சித்திரவதைக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் ஒரு வதந்தி உண்டு.

இந்தச் செய்திகள் வெளியே வந்தபோது ஒட்டுமொத்த அரபு உலகமும் நாசரைத் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாட ஆரம்பித்துவிட்டது. இஸ்ரேலின் கொட்டங்களை அடக்குவதற்கு நாசர்தான் ஒரே சரியான ஆள் என்று பேசினார்கள்.

உலகம் இதையெல்லாம் எவ்வாறு பார்த்தது என்பதைவிட, நடந்த சம்பவங்களை இஸ்ரேல் அன்று எப்படிப் பார்த்தது என்று கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம்.

ஏற்கெனவே அமெரிக்காவின் ஆதரவு இஸ்ரேலுக்கு இருந்தது. இந்த சூயஸ் விவகாரத்துக்குப் பிறகு, அமெரிக்காதான் அடுத்த வல்லரசு என்று அத்தனை தேசங்களும் எழுந்து நின்று தலைதாழ்த்தி வணக்கம் சொன்னபோது, ஒரு நண்பனாக அமெரிக்காவின் தோளில் தட்டிக்கொடுத்து தன்னுடைய நெருக்கத்தை இன்னும் வெளிப்படையாகக் காட்டிக்கொள்ள ஆரம்பித்தது இஸ்ரேல்.

அதன்மூலம் எகிப்து என்ன பயமுறுத்தினாலும் தனக்கு அதனால் பாதிப்பு ஏதுமில்லை என்று சொல்லாமல் சொன்னது.

எகிப்து விஷயத்தில் இஸ்ரேல் எக்கேடு கெட்டாலும் அதன் அமெரிக்கச் சார்பு நிலை நிச்சயம் சோவியத் யூனியனுக்கு எரிச்சல் தரும் என்பதை இஸ்ரேலியர்கள் உணராமல் இல்லை. ஆனாலும் சோவியத் யூனியன் ஒருபோதும் தன்னை ஆதரிக்காது என்றே இஸ்ரேல் நம்பியது.

இஸ்ரேல் எதிர்பார்த்தது ஒரு தோள். சாய்ந்துகொள்வதற்கான தோள். அவர்களால் சுயமாக யுத்தம் செய்ய முடியும்.

யுத்தத்துக்குத் தேவையான ஆயுதங்களைக்கூட அவர்களே உற்பத்தி செய்துகொள்வார்கள். பண உதவியைக் கூட இஸ்ரேல் பெரிதாக எதிர்பார்க்கவில்லை. உழைப்பின் மூலம் வேண்டிய பணத்தைத் தானே சம்பாதித்துக்கொள்ள முடியும் என்பதுதான் அன்றைக்கும், இன்றைக்கும், என்றைக்குமே இஸ்ரேலின் சித்தாந்தம்.

ஆனால் அவர்களுக்கு ஒரு தார்மீக ஆதரவு வேண்டியிருந்தது. யாராவது ஒரு பெரிய சக்தி தனக்காகக் குரல் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்த்தார்கள்.

அந்த சக்தி ஓர் அயோக்கிய சக்தியாக இருந்தால்கூடப் பாதகமில்லை. ஆனால் பெரிய சக்தியாக இருக்கவேண்டும்.

மத்தியக் கிழக்கில் இஸ்ரேல் ஜீவித்திருப்பதென்பது, சிங்கத்தின் குகையில் ஓர் ஓரத்தில் குடிசை போட்டுக்கொண்டு வாழ்வது மாதிரிதான்.

எந்த நிமிஷம் யார் பாய்வார்கள் என்று சொல்லமுடியாது. இதோ எகிப்து இன்றைக்கு வேலையைக் காட்டிவிட்டது. நாளைக்கு ஜோர்டன் தாக்கலாம். ஈராக் யுத்தத்தை ஆரம்பிக்கலாம்.

கழுத்தில் இருக்கும் கத்தியான சிரியா அடிக்க வரலாம்.

அவ்வளவு ஏன், அத்தனை பேருமே சேர்ந்துகூட சண்டைக்கு வரலாம். இதற்கெல்லாம் ஒரு காரணம்கூட வேண்டாம். எதாவது கேட்டால் பாலஸ்தீனிய அரேபியர்களுக்கு ஆதரவாகப் போர் என்று சுலபமாகச் சொல்லிவிட முடியும்.

என்ன ஆனாலும் தன்னை ஆதரிக்க இஸ்ரேலுக்கு ஒரு பெரிய ஆதரவு சக்தியாக அமெரிக்கா இருக்கும் என்று உறுதியானது அப்போதுதான்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை இஸ்ரேலை ஆதரிப்பதற்கான காரணங்கள் மிகவும் எளிமையானவை.

ஒன்று, இஸ்ரேலை சோவியத் யூனியன் ஆதரிக்கவில்லை என்பது.

இரண்டாவது, மத்தியக் கிழக்கில் தனக்கொரு தளமாக இஸ்ரேல் இருக்கும் என்கிற நம்பிக்கை. திகட்டத் திகட்டப் பொருளாதார உதவிகள், ஆயுத உதவிகளை அளித்துக்கொண்டிருப்பதன் மூலம் இஸ்ரேலைத் தன்னுடைய குட்டிக் காலனி மாதிரியே அமைத்துக்கொண்டு, அங்கிருந்து அனைத்து எண்ணெய் தேசங்களையும் கண்காணிக்கலாம் என்பது அமெரிக்காவின் எண்ணம்.

என்ன முயன்றாலும் சோவியத் யூனியனுடன் முஸ்லிம் நாடுகளை ஒட்டவைக்க முடியாது என்று அன்றைய அமெரிக்க அதிபர் ஐசனோவர் திட்டவட்டமாகக் கருதினார்.

எங்காவது, எதிலாவது அவர்கள் முட்டிக்கொள்ள நேரிடும் என்பதே அவரது எண்ணம்.

ஆகவே, மத்தியக் கிழக்கில் காசு பண்ணுவதற்குத் தான் இஸ்ரேலை ஆதரிப்பது லாபகரமான முடிவாகவே இருக்கும் என்று அமெரிக்கா நினைத்தது.

தவிரவும் இஸ்ரேலில் எண்ணெய் கிடையாது. இன்னும் கொஞ்சம் நகர்ந்து கிழக்கே போனால்தான் எண்ணெய். ஆகவே, இஸ்ரேலில் காசு பண்ணுகிறது அமெரிக்கா என்றும் யாரும் குற்றம் சொல்ல முடியாது.

என்ன அழகான திட்டம்!

அன்று தொடங்கி, இஸ்ரேல் ராணுவம், இஸ்ரேல் வர்த்தகம், இஸ்ரேல் பொருளாதாரம் ஆகிய மூன்று அம்சங்கள் எப்படியெப்படி இருக்க வேண்டும் என்று தீர்மானிக்கும் ஒரு நிழல் சக்தியாக அமெரிக்கா ஆகிப்போனது.

தனது முதல் கட்டளையாக, எகிப்திடமிருந்து இஸ்ரேல் கைப்பற்றிய சினாய் பகுதியிலிருந்து இஸ்ரேலிய ராணுவத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளும்படி ரகசியமாகக் கேட்டுக்கொண்டது.

ஒரு துண்டு நிலம் என்னவிதமான பிரச்னைகளை உருவாக்கும் என்று சொல்லமுடியாதல்லவா?

அமெரிக்காவின் நீண்டநாள் திட்டங்களுக்கு அந்த ஒரு மாநிலமே கூடத் தடையாக இருக்கலாம். இஸ்ரேலுக்கே அது ஒரு நிரந்தரத் தலைவலிப் பிராந்தியமாகிவிடக்கூடும்.

இதையெல்லாம் யோசித்துத்தான் சினாயை எகிப்திடமே திரும்பக் கொடுத்துவிடலாம் என்று முடிவானது.

1957-ம் ஆண்டு இறுதியில் இஸ்ரேல், சினாயில் இருந்த தன்னுடைய ராணுவத்தைக் கட்டக்கடைசியில் மொத்தமாக வாபஸ் பெற்றுக்கொண்டது. மீண்டும் அங்கே எகிப்து ராணுவம் வந்து உட்கார்ந்துகொண்டது.

எல்லையில் வலுவான வேலி போடப்பட்டது. இங்கேயும் நிலம்தான். அங்கேயும் நிலம்தான். சமதளமும் கூட. ஆனாலும் நடுவில் கண்ணுக்குத் தெரியாத மிகப்பெரிய பள்ளம் ஒன்று இருப்பதாகவே அனைவருக்கும் தோன்றியது.

யாரைப் பிடித்து யார் தள்ளப்போகிறார்கள் என்பதே கேள்வி. எப்போது என்பது அடுத்த கேள்வி.

இதையெல்லாம் ஒரு மனிதர் பார்த்துக்கொண்டிருந்தார். மிகவும் அமைதியாக. எந்தக் கருத்தும் சொல்லாமல். யாசர் அராஃபத்.

அவர் எகிப்தில் பிறந்த பாலஸ்தீன்காரர் என்பதால் சூயஸ் விவகாரத்தில் மிகுந்த உணர்ச்சிவசப்பட்ட நிலையிலேயே இருந்தார். அதனாலேயேதான் இப்போது எதுவும் பேசக்கூடாது, செய்யக்கூடாது என்று தீர்மானமாக இருந்தார்.

அவரது சிந்தனையெல்லாம் ஒரே விஷயத்தைப் பற்றித்தான். நாசரை எந்தளவுக்கு நம்பலாம்?
தொடரும்... மீண்டும் வாருங்கள்.
____________________________________

அனைத்து மேற்கத்திய நாடுகளும் எப்படியாவது யூதர்களைக் கொண்டுபோய் பாலஸ்தீனில் திணித்துவிடவேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்பட்டுக் கொண்டிருக்கும் போது ஹிட்லர் ஒருவர்தான் யூதர்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கியிருந்தவர். அந்த ஒரு காரணத்தால்தான் முஸ்லிம்கள் அவரை ஆதரித்தார்கள்.


அரேபியர்களுக்கு அடி வயிறு பற்றிக்கொண்டு எரிந்தது. யாருடைய பூமியை யார் பங்கிட்டு, யாருக்குக் கொடுப்பது?

சந்தேகமே இல்லாமல் யூதர்கள் நம்பிக்கை துரோகம் செய்தார்கள். தலைமையின்றித் தத்தளித்துக்கொண்டிருந்த அரேபியர்களை ஓட ஓட விரட்டி அவர்களின் தேசத்தையும் அபகரித்துக்கொண்டார்கள்.

எந்த அரபு தேசங்கள் ஒன்றுதிரண்டு பாலஸ்தீனுக்கு ஆதரவாகப் போரில் நிற்கும் என்று சொல்லப்பட்டதோ, அதே முஸ்லிம் தேசங்களை சூழ்ச்சியில் வளைத்துப் போட்டு, சொந்த சகோதர தேசமான பாலஸ்தீனுக்கு எதிராகவே அவர்களை அணி திரட்டினார்கள்.

நாய்க்கு எலும்பு வீசுவதுபோல், அபகரித்த நிலத்தில் ஆளாளுக்குக் கொஞ்சம் பங்குபோட்டுக் கொடுத்து, அந்த சமயத்துக்குத் திருப்திப்படுத்தினார்கள். அப்புறம் அவர்கள் மீதும் படையெடுத்து, கொடுத்த இடங்களைத் திரும்ப அபகரித்தார்கள் யூதர்கள்.

=======================================================
இது 100 பகுதிகள் அடங்கியது.அடியில் பகுதிகளின் சுட்டி.. படிக்க அதன் மேல் க்ளிக் செய்ய‌வும்.
(1-2. ) (3-4) (5-6 ..) . (7-8 ..). ( 9-10 ..) (11-12 ...) (13-14 ...)

(
15-16 .. ) (17-18....) (19-20. ..) (21-22....) (23-24....) ( 25-26..)

(
27-28. ) ( 29-30.. )


( 31-32.) ( 33-34....) (35.36. ) (37-38. ) ( 39.40 ) ( 41-42..)

(
43-44.) (.45-46.) ( 47-48.) ( 49-50 ) . (51-52.) (53-54.)

(
55-56.) (57-58.) .(59-60.)


(.61-62) (63-64.) (65-66.) (67-68.) ( 69-70). (71-72.)

(
73-74.) (75-76.) (77-78.) (79-80.) (81-82).. ( 83-84).

(
85-86) (87-88) . (89-90) (91-92) (93-94) ( 95-96.)

(
97-98). (99.100.)

No comments: